Home இலங்கை வடக்குக்கான ரயில் சேவைகள் தொடர்பில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம்

வடக்குக்கான ரயில் சேவைகள் தொடர்பில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம்

0
image

வடக்குக்கான ரயில் சேவையை மீள அதிகரிப்பதற்கு, இயந்திர பற்றாக்குறையே பிரதான காரணம் எனவும், புதிய இயந்திரங்களை கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் ரவீந்திர பத்மபிரிய தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் – கொழும்பு இடையிலான ரயில்  சேவைகளை மீள அதிகரித்தல், நேர அட்டவணைகளை மீளமைத்தல் மற்றும் உட்கட்டமைப்புப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல், வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் அண்மையில் நடைபெற்றது.

வடக்கு மாகாணத்துக்கு பெருமளவான சுற்றுலாவிகள் வருகை தருவதாலும், பாதுகாப்பான மற்றும் நேரத்தை மீதப்படுத்தும் பயணமாக ரயில் போக்குவரத்து அமைவதாலும், கொழும்பு – யாழ்ப்பாணம் இடையிலான ரயில் சேவைகளை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை ஆளுநர் கூட்டத்தில் வலியுறுத்தினார்.

அத்துடன், பயணிகளின் வசதிக்கேற்ப தற்போதைய நேர அட்டவணைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

இதற்குப் பதிலளிக்கையிலேயே ரயில் திணைக்கள பொது முகாமையாளர் இவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தற்காலிகமாகச் சேவைகளை அதிகரிப்பது மற்றும் பகல் நேர ரயில் சேவைகளை ஒழுங்கமைப்பது தொடர்பில் ஆராய்ந்து துரித நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

அத்துடன், ‘யாழ். ராணி’ ரயில் சேவையில் அவசியமான மாற்றங்களை மேற்கொண்டு, அதனை வவுனியா வரை நீடிப்பது குறித்தும் இக்கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.

அதேவேளை அநுராதபுரம் வரை மாத்திரமே முன்னெடுக்கப்படும் சரக்கு ரயில் சேவையை, வடக்கு மாகாணத்தின் காங்கேசன்துறை வரை விரிவுபடுத்துமாறு ஆளுநர் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ரயில்வே பொது முகாமையாளர், அதற்கான துரித நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்தார்.

 

Source: https://samugammedia.com/key-decision-taken-regarding-train-services-to-the-north-1782117597

NO COMMENTS

Exit mobile version