Home இலங்கை வடக்கு, கிழக்கு கடற்கரைகளை பாதுகாக்க கடும் சட்ட நடவடிக்கை – ஜனாதிபதி உத்தரவு

வடக்கு, கிழக்கு கடற்கரைகளை பாதுகாக்க கடும் சட்ட நடவடிக்கை – ஜனாதிபதி உத்தரவு

0
image

சுற்றாடல் அமைச்சின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, வடக்கு மற்றும் கிழக்கில் புதிதாக அபிவிருத்தியடைந்து வரும் கடற்கரைப் பகுதிகளை பாதுகாக்க உடனடி மற்றும் அதிகபட்ச நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நேற்று (22) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, கடற்கரைப் பகுதிகள் அபிவிருத்தி செய்யப்பட்ட பின்னர் இடம்பெறும் சட்டவிரோதக் கட்டிட நிர்மாணங்கள் கடற்கரைக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்துகின்றன என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அவற்றைத் தடுப்பதற்காக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும், அதற்காக விசேட செயற்பாட்டுக் குழுவொன்றை நியமிக்குமாறும் அறிவுறுத்தினார்.

அதேவேளை, ஒலுவில் பகுதியில் ஏற்பட்டுள்ள கடலரிப்பைத் தடுப்பதற்கான தீர்வுகளை ஆராய நிபுணர் குழுவொன்றை நியமித்து விரைவில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அவர் உத்தரவிட்டார்.

மனித–யானை மோதலைக் குறைக்கும் நோக்கில் 2026ஆம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் மந்தமாக முன்னெடுக்கப்படுவது குறித்து கவலை வெளியிட்ட ஜனாதிபதி, தேவையான நிதி ஒதுக்கப்பட்டிருந்தும் திட்டங்கள் தாமதமடைவதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்தார்.

கிராமப்புற மக்களின் உயிர் மற்றும் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், இவ்வாண்டிற்காக ஒதுக்கப்பட்ட நிதியை இவ்வாண்டுக்குள்ளேயே முழுமையாக பயன்படுத்தி நிர்மாணப் பணிகளை நிறைவு செய்யுமாறும் அதிகாரிகளுக்கு அவர் வலியுறுத்தினார்.

மேலும், யானை வேலிகளின் எல்லைகள் வனவிலங்கு வலயங்களை மட்டும் வரையறுப்பதற்காக அல்ல, மக்களின் உயிரைப் பாதுகாப்பதற்காகவே அமைக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மேலும், இலங்கைக்கான தரமான கார்பன் உமிழ்வுக் கொள்கையை உருவாக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக பட்டபெந்தி தெரிவித்ததுடன், அதன் மூலம் புதிய முதலீட்டு வாய்ப்புகளை ஈர்க்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.

வனஜீவிகள் மற்றும் வனப்பாதுகாப்புத் திணைக்களங்களின் ஓய்வு விடுதிகளை நவீனமயப்படுத்துதல், தேசிய தாவரவியல் பூங்காக்களை மேம்படுத்துதல் மற்றும் மலர் வளர்ப்பை கைத்தொழிலாக ஊக்குவிக்கும் திட்டங்கள் குறித்தும் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.

Source: https://samugammedia.com/strict-legal-action-to-protect-the-northern-and-eastern-coastlines–presidential-order-1784783732

NO COMMENTS

Exit mobile version