முல்லைத்தீவு மாவட்டத்தில் வனவளம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கங்களின் ஆக்கிரமிப்பிலிருந்து ஏற்கனவே விடுவிக்கத் தீர்மானித்த 17,469.58ஹெக்டயர் காணிகளையும் உடனடியாக விடுவித்து காணிகளுக்குரிய மக்களிடம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளை யுத்தகாலத்தில் மக்களுக்கு காணி ஆவணங்களை எடுத்துச் செல்லக்கூடிய சூழல் இருக்கவில்லை என இதன்போது சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர், அவ்வாறு ஏற்கனவே விடுவிப்பதெனத் தீர்மானிக்கப்பட்ட காணிகளுக்கு தற்போது மக்களிடமிருந்து ஆவணங்களைக் கோருவதை ஏற்றுக்கொள்ளமுடியாதெனவுந் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக இன்று இடம்பெற்ற மாந்தை கிழக்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் மாந்தை கிழக்கு பிரதேசத்தில் வனவளம் மற்றும் வனஜீவராசிகள் திணைளங்களின் ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்கமுடியுமென ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட 1,231.37ஹெக்டயர் காணிகளை விடுவிப்பதற்கு, மக்கள் காணி ஆவணங்களை கையளிக்கவேண்டுமென பிரதேசசெயலாளரால் தெரிவிக்கப்பட்ட நிலையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.
இதுதொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
மக்களிடம் ஆவணங்களைக் கோருவது பிழையான விடயமாகும். ஏன் எனில் கடந்த யுத்த காலப்பகுதியில் மக்கள் ஆவணங்கள் எவற்றையும் எடுத்துச் செல்லவில்லை. ஆவணங்களை எடுத்துச் செல்லக்கூடிய சூழல் இருக்கவில்லை.
இவ்விடயம் தொடர்பில் நான் தொடர்ச்சியாக பேசிவருகின்றேன். பாராளுமன்றிலும் இதுதொடர்பில் பேசியிருக்கின்றேன்.
அத்தோடு மாந்தைகிழக்கில் வனவளத் திணைக்களத்தினாலும், வனஜீவராசிகள் திணைக்களத்தினாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள 1,231.37ஹெக்டயர் காணிகள் விடுவிக்கப்படவேண்டுமென ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தன.
குறிப்பாக உரிய பொறுப்புவாய்ந்த உத்தியோகத்தர்களால் நேரடியாக கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டே குறித்த காணிகள் விடுவிக்கப்படவேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டிருந்தன.
ஏற்கனவே விடுவிக்கப்பட வேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்ட காணிகளுக்கு தற்போது ஆவணங்களை காண்பிக்குமாறு கோருவது எவ்வகையில் நியாயம்?
யுத்தகாலத்தில் கோவணத்துடன் சென்ற மக்களிடம் காணி ஆவணங்களை கோருவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
குறிப்பாக உரிய பொறுப்புவாய்ந்த உத்தியோகத்தர்களின் பங்குபற்றுதலுடன் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகளுக்கு அமைவாக கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 3,013.96ஹெக்டயர் காணிகளும், புதுக்குடியிருப்பில் 5,131.13ஹெக்டயர் காணிகளும்,
ஓட்டுசுட்டான் பிரதேசசெயலாளர் பிரிவில் 7,266.04ஹெக்டயர் காணிகளும், துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் 399.80ஹெக்டயர் காணிகளும், மாந்தை கிழக்கில் 1,231.37ஹெக்டயர் காணிகளும்,
மாணாலாறு பிரதேசத்தில் 427.28ஹெக்டயர் காணிகளும் வனவளத் திணைக்களம் மற்றும் வனஜீவரசிகள் திணைக்களங்களிடமிருந்து விடுவிக்கப்படவேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மொத்தம் 17,469.58ஹெக்டயர் காணிகள் வனவளம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களங்களின் ஆக்கிரமிப்பிலிருந்து விடுவித்து, மக்களுக்கு வழங்கப்பட வேண்டுமென ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ஏற்கனவே விடுவிக்கப்படவேண்டுமெனத் தீர்மானக்கப்பட்ட காணிகளுக்கு ஆவணங்களைக் கோருவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது. எனவே உடனடியாக மக்களுக்கு அந்தக் காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
மேலும் அம்பாந்தோட்டையிலுள்ள காணிகளை நாம் விடுவித்து எமது மக்களிடம் வழங்குமாறு கோரவில்லை. எமது மக்களுடைய காணிகளை காணிகளுக்குரிய எமது மக்களிடம் வழங்குமாறே கோருகின்றோம் – என்றார்.
