Home இலங்கை வன்னிக்கு பெருமை சேர்த்த பாபு மாஸ்டர் – 7ஆம் நிலைக் கறுப்புப்பட்டி அங்கீகாரம்

வன்னிக்கு பெருமை சேர்த்த பாபு மாஸ்டர் – 7ஆம் நிலைக் கறுப்புப்பட்டி அங்கீகாரம்

0
image

வன்னிப் பிரதேசத்தில் கராத்தே மற்றும் சிலம்பம் உள்ளிட்ட தற்காப்புக் கலைகளை பல ஆண்டுகளாக   கற்பித்து வரும் சூசைநாதர் யசோதரன் (பாபு) மாஸ்டர், தற்காப்புக் கலை உலகின் உயரிய அங்கீகாரங்களில் ஒன்றாகக் கருதப்படும் 7ஆம் நிலைக் கறுப்புப்பட்டி (7th Dan Black Belt) அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார்.

இந்தியாவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் நேற்றையதினம் அவருக்கு குறித்த கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த உயரிய அங்கீகாரம், கிராண்ட் மாஸ்டர் சோகி கிராடோ கன்ரோவால் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான தலைமை ஒருங்கிணைப்பாளராகவும், சிவலீமன் சிலம்பம் கலைமன்றத்தின் தலைவராகவும், பாபு இசின்ரியூ கராத்தே பாடசாலையின் நிறுவனரும் தலைவராகவும் செயற்பட்டு வரும் சூசைநாதர் யசோதரன் மாஸ்டருக்கு இந்தக் கௌரவம் வழங்கப்பட்டுள்ளமை வன்னி மக்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் பெருமையையும் ஏற்படுத்தியுள்ளது.

பல ஆண்டுகளாக கராத்தே, சிலம்பம் உள்ளிட்ட தற்காப்புக் கலைகளை ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு பயிற்றுவித்து வரும் அவர், ஒழுக்கம், கட்டுப்பாடு மற்றும் தன்னம்பிக்கை கொண்ட இளைஞர் சமூகத்தை உருவாக்குவதிலும் முக்கிய பங்காற்றி வந்துள்ளார். 

தற்காப்புக் கலைகளின் வளர்ச்சிக்காகவும், மாணவர்களின் ஆளுமை மற்றும் திறன் மேம்பாட்டிற்காகவும் அவர் மேற்கொண்டு வரும் அர்ப்பணிப்பான சேவைகளைப் பாராட்டி இந்த 7ஆம் நிலைக் கறுப்புப்பட்டி அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

வீரதீரக் கலைத் துறையில் வன்னியின் அடையாளமாகத் திகழும் பாபு மாஸ்டரின் இந்தச் சாதனையை வன்னி மக்கள் பெருமையுடன் வரவேற்று, அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Source: https://samugammedia.com/babu-master-who-brought-pride-to-va-vannam–7th-level-black-belt-recognition-1785248181

NO COMMENTS

Exit mobile version