Home இலங்கை வவுனியாவில் இ.போ.ச. பேருந்து சேவைகள் முடக்கம்: மாற்று ஏற்பாடாக தனியார் பேருந்துகள் அதிகரிப்பு!

வவுனியாவில் இ.போ.ச. பேருந்து சேவைகள் முடக்கம்: மாற்று ஏற்பாடாக தனியார் பேருந்துகள் அதிகரிப்பு!

0
image

வவுனியா இலங்கை போக்குவரத்துச் சபையின் (இ.போ.ச.) சாலைப் பொறியியல் பிரிவு ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக, இன்று (திங்கட்கிழமை) காலை முதல் இ.போ.ச. பேருந்து சேவைகள் முற்றாக முடங்கியுள்ளன. 

வாரத்தின் முதல் நாளான இன்று இந்த திடீர் வேலைநிறுத்தம் ஏற்பட்டதால், பாடசாலை மாணவர்கள், அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.

வவுனியா இ.போ.ச. சாலையின் பொறியியல் பகுதியில் பணிபுரியும் ஊழியர்களுக்கான மேலதிக நேரக்கொடுப்பனவு (Overtime) தொடர்பான சில நிர்வாகப் பிரச்சினைகள் எழுந்துள்ளன. 

இதற்குத் தீர்வு எட்டப்படாத நிலையில், பொறியியல் பிரிவு ஊழியர்கள் நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) பணிக்குச் சமூகம் தரவில்லை. 

இதன் காரணமாக பேருந்துகளின் தினசரி பராமரிப்பு மற்றும் சீராக்கல் பணிகள் பாதிக்கப்பட்டு, இன்று காலை வழமையான பேருந்து சேவைகளை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இ.போ.ச. பேருந்து முடக்கத்தினால் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெருக்கடியைக் குறைக்கும் வகையில், உடனடியாக மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தலையீட்டின் பிரகாரம், வவுனியா மாவட்டத்தில் வழமையை விட அதிகளவிலான தனியார் பேருந்துகள் தற்போது மேலதிக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்த உடனடித் தலையீடு காரணமாக, பொதுமக்கள் மற்றும் அரச ஊழியர்களின் போக்குவரத்துத் தட்டுப்பாடு ஓரளவுக்குக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது

Source: https://samugammedia.com/ibps-bus-services-suspended-in-vavuniya-private-buses-increase-as-alternative-arrangement-1783933271

NO COMMENTS

Exit mobile version