Home இலங்கை வவுனியாவில் பெண்ணை துஷ்பிரயோகம் செய்து கொள்ளை – அதிரடிக் காட்டிய பொலிஸார்

வவுனியாவில் பெண்ணை துஷ்பிரயோகம் செய்து கொள்ளை – அதிரடிக் காட்டிய பொலிஸார்

0
image

வவுனியா, மடுகந்தை, மயிலங்குளம் பகுதியில் வீடொன்றை உடைத்து உள்நுழைந்து 51 வயதுடைய பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்து, பெருமளவிலான நகைகள், இரத்தினக்கற்கள், பணம் மற்றும் ஆவணங்களை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 8ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பவத்தில், வீட்டுக்குள் நுழைந்த குழுவினர் அங்கிருந்த வாகன சாரதி மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். பின்னர் வீட்டின் உரிமையாளரான பெண்ணின் வாயை பிளாஸ்டரால் ஒட்டி, கைகளை பின்னால் கட்டி, அவர் அணிந்திருந்த நகைகளை கழற்றியதுடன், அவரை மூவர் இணைந்து பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரத்தினக்கற்கள், 56 இலட்சம் ரூபாய் பெறுமதியான 15 பவுணுக்கும் அதிகமான தங்க நகைகள், 5 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணம், காணி மற்றும் வீட்டு உறுதிப்பத்திரங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டையடுத்து வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினர் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு, ஆபத்தான நிலையில் இருந்த பெண்ணை மீட்டு வவுனியா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர்.

இதன்போது, பாதிக்கப்பட்ட பெண்ணின் தொழிற்சாலையில் பணியாற்றிய 35 வயதுடைய மாத்தறை, உக்குவெல பகுதியைச் சேர்ந்த ஒருவரும், 29 வயதுடைய சிவலாங்குளம், களேமிதுனுவெல பகுதியைச் சேர்ந்த மற்றொருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.

மேலும், நேற்று மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த திருடப்பட்ட இரத்தினக்கற்கள், தங்க நகைகள், வாகனப் புத்தகங்கள், திறப்புகள், 35 காணி மற்றும் வீட்டு உறுதிப்பத்திரங்கள் உள்ளிட்ட ஆவணங்களும், கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் வாகனமும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம்.யே.எஸ். ரத்னமலலாவின் வழிகாட்டலில், வவுனியா குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி லங்காசிங்க மற்றும் பதில் பொறுப்பதிகாரி ஆர். பந்துல தலைமையிலான பொலிஸ் குழுவினர் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நாளைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Source: https://samugammedia.com/woman-abused-and-robbed-in-vavuniya—police-acted-swiftly-1786873471

NO COMMENTS

Exit mobile version