Home இலங்கை வாணவேடிக்கையால் தீப்பற்றிய பனைமரம், பாதுகாப்பு வேலி – நவாலி திருவிழாவில் விபரீதம்

வாணவேடிக்கையால் தீப்பற்றிய பனைமரம், பாதுகாப்பு வேலி – நவாலி திருவிழாவில் விபரீதம்

0
image

யாழ்ப்பாணம் – நவாலி அந்திரான் கிராமத்தில் நேற்று (20) இரவு நடைபெற்ற திருவிழாவின் போது வாணவேடிக்கையால் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது பனை மரம் ஒன்றும், பாதுகாப்பு வேலியும் தீப்பற்றி எரிந்ததுடன், சில பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறான சம்பவங்களைத் தவிர்ப்பதற்காக வழிபாட்டுத் தலங்களின் நிர்வாகங்களுக்கு பலமுறை அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் தெரிவித்துள்ளார்.

தேவையற்ற ஒலிபெருக்கி பயன்பாடு, பட்டாசு வெடித்தல், லேசர் ஒளிக்கீற்றுகளைப் பயன்படுத்துதல், யானைகளை அழைத்துச் செல்லுதல் உள்ளிட்ட பொதுமக்களின் பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகளைத் தவிர்க்குமாறு தொடர்ச்சியாக ஊடகங்கள் வாயிலாகவும் கோரிக்கைகளும் அறிவுறுத்தல்களும் விடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், சில ஆலயங்கள் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு உரிய முறையில் செவிசாய்க்காமல், பொதுமக்களுக்கு சிரமத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகளை முன்னெடுத்து வருவது கவலையளிப்பதாகவும் அரச அதிபர் தெரிவித்துள்ளார்.

எனவே, வழிபாட்டுத் தலங்களின் நிர்வாகத்தினர், மதகுருமார்கள் உள்ளிட்ட பொறுப்புக்கூற வேண்டிய அனைத்து தரப்பினரும் இவ்விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து, எதிர்காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் சமூகப் பொறுப்புணர்வுடன் திருவிழா நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Source: https://samugammedia.com/a-palm-tree-caught-fire-due-to-fireworks-security-fence–chaos-at-the-navali-festival-1787309104

NO COMMENTS

Exit mobile version