அம்பாந்தோட்டை, தங்காலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சியம்பலாகொட பகுதியில் உள்ள வீடொன்றின் முன்பாக, படுகொலை செய்யப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 88 வயதுடைய முதியவர் ஒருவரின் சடலம் நேற்று (11) சனிக்கிழமை இரவு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் பெலியத்த, சியம்பலாகொட, திகங்வல பகுதியைச் சேர்ந்த கங்கானம் ஆரச்சிகே தனபால என்பவராவார். நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர், தனது மனைவியுடன் அந்த வீட்டில் வசித்து வந்துள்ளார்.
நேற்று இரவு சுமார் 8.00 மணியளவில், வீட்டின் முன்புறத்தில் உள்ள தண்ணீர் குழாய்க்கு அருகில் அவர் இரத்த வெள்ளத்தில் விழுந்து கிடப்பதை உறவினர்கள் கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
சடலத்தில் பல வெட்டுக்காயங்கள் காணப்பட்டதுடன், சம்பவ இடத்திலும் அவரது முகத்திலும் அதிகளவு இரத்தக் கறைகள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன் அடிப்படையில், கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளதாக விசாரணைகள் தெரிவிக்கின்றன.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில், உயிரிழந்தவரின் 48 வயதுடைய இளைய மகன் ஒருவர் சந்தேகத்தின் பேரில் தங்காலை தலைமையகப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் ஓய்வுபெற்ற கடற்படைச் சிப்பாய் என்பதுடன், சம்பவம் நிகழ்ந்த தினம் காலை சுமார் 11.00 மணியளவில் தந்தையின் வீட்டிற்கு வந்திருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேலும், கைது செய்யப்பட்டபோது அவர் கடுமையான மதுபோதையில் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த தங்காலை கோட்ட தடயவியல் குற்றப் புலனாய்வுப் பிரிவு (SOCO) அதிகாரிகள் முதற்கட்ட தடயவியல் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.
இக்கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்காலை தலைமையகப் பொலிஸ் நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.
