Home இலங்கை வெப்பக் குறியீடு ‘எச்சரிக்கை’ மட்டத்தில்! நாளை அவதானமாக இருங்கள்

வெப்பக் குறியீடு ‘எச்சரிக்கை’ மட்டத்தில்! நாளை அவதானமாக இருங்கள்

0
image

வளிமண்டலவியல் திணைக்களம், நாளை (09) மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு வெப்பமான காலநிலை தொடர்பான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

அந்த மாவட்டங்களின் சில பகுதிகளில் வெப்பக் குறியீடு (Heat Index) “எச்சரிக்கை” (Caution) மட்டத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

காற்றின் வெப்பநிலை மற்றும் சார்பு ஈரப்பதத்தை (Relative Humidity) அடிப்படையாகக் கொண்டு, மனித உடல் உணரும் வெப்பத்தின் அளவைக் காட்டும் வெப்பக் குறியீடு, பகல் நேரங்களில் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகளாவிய காலநிலைக் கணிப்பு மாதிரிகளின் தரவுகள், வளிமண்டல ஈரப்பதம் மற்றும் அதிகபட்ச வெப்பநிலை ஆகியவற்றின் அடிப்படையில் இந்த வெப்பச் சுட்டெண் கணக்கிடப்பட்டுள்ளது.

நீண்ட நேரம் நேரடி சூரிய ஒளியில் இருப்பதும், கடுமையான வெளிப்புற உடல் உழைப்பில் ஈடுபடுவதும் உடல் சோர்வை ஏற்படுத்தக்கூடும் என்றும், தொடர்ந்து அதிக உழைப்பில் ஈடுபட்டால் வெப்பத்தால் ஏற்படும் தசைப்பிடிப்பு (Heat Cramps) போன்ற உடல்நலப் பிரச்சினைகள் உருவாகக்கூடும் என்றும் திணைக்களம் எச்சரித்துள்ளது.

எனவே, பாதிக்கப்படக்கூடிய மாவட்ட மக்களிடம் போதியளவு தண்ணீர் அருந்தி உடலை நீர்ச்சத்துடன் வைத்திருக்கவும், தேவையற்ற நேரடி சூரிய ஒளி தாக்கத்திலிருந்து தவிர்க்கவும், அதிக வெப்பம் நிலவும் நேரங்களில் கடுமையான வெளிப்புற பணிகள் மற்றும் உடற்பயிற்சிகளை கட்டுப்படுத்தவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Source: https://samugammedia.com/heat-index-is-at-warning-level-be-careful-tomorrow-1783516860

NO COMMENTS

Exit mobile version