வெலிகம, மணல்கம கடற்கரைப் பகுதியில் அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த துனிசியாவைச் சேர்ந்த 21 வயதுடைய சுற்றுலாப் பயணி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், அவரது சடலம் இன்று (09) கரை ஒதுங்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துனிசியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று, நேற்று (08) மணல்கம பகுதியிலுள்ள பழைய கடைக் கடற்கரையில் அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடலில் நிலவிய பலத்த காற்று மற்றும் சீற்றமான அலைகள் காரணமாக குறித்த இளைஞர் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.
அவரைத் தேடும் பணியில் கடற்படையினர், பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினர் மற்றும் கடலோரப் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் இணைந்து தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். எனினும், நேற்று அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், காணாமல் போன சுற்றுலாப் பயணியின் சடலம் இன்று பழைய கடைக் கடற்கரைப் பகுதியில் கரை ஒதுங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Source: https://samugammedia.com/foreign-youth-drowns-while-surfing-in-the-velikam-sea-1786259604
