Home இலங்கை வெல்டிங் தீப்பொறியால் தேங்காய் நார் தொழிற்சாலையில் பாரிய தீ விபத்து – பெருமளவு சேதம்

வெல்டிங் தீப்பொறியால் தேங்காய் நார் தொழிற்சாலையில் பாரிய தீ விபத்து – பெருமளவு சேதம்

0
image

அம்பாறை மாநகர சபை எல்லைக்குட்பட்ட நவகம்புர தொழிற்பேட்டையில் அமைந்துள்ள தேங்காய் நார் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் பெருமளவான சொத்துக்கள் சேதமடைந்துள்ளன.

நவகம்புர தொழிற்பேட்டையில் இயங்கி வரும் ‘பிரபோத’ நிறுவனத்துக்குச் சொந்தமான தேங்காய் நார் தொழிற்சாலையிலேயே இந்த தீ விபத்து நேற்று (13) மாலை இடம்பெற்றுள்ளது.

தொழிற்சாலையின் கதவொன்றை வெல்டிங் (பற்றவைப்பு) செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்த போது, அதிலிருந்து சிதறிய தீப்பொறி அருகில் இருந்த தேங்காய் நார் மீது விழுந்ததையடுத்து தீ ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தேங்காய் நார் மற்றும் உமிகள் இலகுவில் தீப்பற்றக்கூடியவை என்பதால், தீ சில நிமிடங்களிலேயே தொழிற்சாலை முழுவதும் வேகமாக பரவியுள்ளது. இதனால் அங்கிருந்த பெருமளவான தேங்காய் நார்கள் மற்றும் உமிகள் தீக்கிரையாகியுள்ளன.

தீ விபத்து தொடர்பில் தகவல் கிடைத்ததும், இலங்கை விமானப்படை முகாமின் தீயணைப்புப் பிரிவினரும் அம்பாறை மாநகர சபை தீயணைப்புப் பிரிவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று  தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

நீண்ட நேர போராட்டத்திற்குப் பின்னர் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்விபத்தினால் ஏற்பட்டுள்ள மொத்த சேத விபரங்கள் இதுவரை மதிப்பிடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாறை தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Source: https://samugammedia.com/massive-fire-accident-at-a-coir-factory-caused-by-a-welding-torch–extensive-damage-1784005207

NO COMMENTS

Exit mobile version