வெளிநாட்டுப் பணியாளர்கள் வெளிநாடுகளில் சட்டப்பூர்வமாக ஈட்டிய வருமானத்தை வங்கி அமைப்பின் ஊடாக இலங்கைக்கு அனுப்பும்போது வரி தொடர்பில் அச்சப்படத் தேவையில்லை என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி ஆணையாளர் ஹிரான் மெனேரிபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வரி நோக்கங்களுக்காக ஒருவர் வசிப்பிடவாசியாகக் கருதப்பட்டால், அவர் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் ஈட்டும் வருமானம் வரிக்கு உட்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், குறிப்பிட்ட மதிப்பீட்டு ஆண்டில் ஒருவர் இலங்கையின் வரி நோக்கங்களுக்காக வசிப்பிடவாசியாக இல்லாத பட்சத்தில், இலங்கைக்கு வெளியே அவர் ஈட்டும் வருமானம் இலங்கையில் வரிக்கு உட்படுத்தப்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, வெளிநாட்டில் பணிபுரியும் ஒருவர் அங்கு சட்டப்பூர்வமாக ஈட்டிய வருமானத்தை வங்கி அமைப்பின் ஊடாக இலங்கைக்கு அனுப்புவதற்கு தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என ஹிரான் மெனேரிபிட்டிய வலியுறுத்தியுள்ளார்.
மேலும், வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்பும்போது, வங்கி அமைப்பின் ஊடாக அந்தப் பணத்திற்கு தனியான வரி எதுவும் அறவிடப்படுவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
