பிரபல ஜோதிடர் சுமனதாச அபேகுணவர்தன இன்று (10) வியாழக்கிழமை இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவினால் நடத்தப்பட்ட ‘சிரிலிய சவிய தொண்டு நிறுவனம் தொடர்பான ஊழல் விசாரணைகள் குறித்தே வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இவ்வாறு ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
‘சிரிலிய சவிய’ அமைப்பின் கணக்குகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள், வங்கி கணக்குகள் முகாமைத்துவம் மற்றும் சந்தேகத்திற்குரிய பணப் பரிவர்த்தனைகள் குறித்து இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிதி முறைகேடு விசாரணைகளின் ஒரு அங்கமாகவே, அன்றைய காலகட்டத்தில் குறித்த அமைப்போடு தொடர்புடைய நபர்கள் மற்றும் அதன் கணக்கு வழக்குகளுடன் தொடர்புடையவர்களிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டு வருகின்றன.
இதேவேளை முன்னாள் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக்க இன்று (10) முற்பகல் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.
மிக் விமானக் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக குறித்த விசாரணை பிரிவில் இன்று காலை 9.30 மணிக்கு முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய, அவர் இந்த விசாரணைப் பிரிவில் இன்று முற்பகல் ஆஜராகியுள்ளார்.
