2 கிராமுக்கும் அதிகமான ஹெரோயினை உடைமையில் வைத்திருந்தமை மற்றும் அதனை விற்பனை செய்தமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்ட இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா நேற்று (21) தீர்ப்பளித்துள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வவுனியா, மெனிக்பாம் பகுதியில் இந்தக் குற்றச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பான குற்றப்பத்திரிகை 2021 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதுடன், வழக்கு விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வந்தன.
இந்நிலையில், எதிரிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரை குற்றவாளியாகக் கண்ட நீதிபதி ஆயுள் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.
நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் தொடர்பான குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் கடுமையான தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கின் சாட்சிகள் அரச சட்டவாதி சிவஸ்கந்தஸ்ரீயினால் நெறிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
