Home இலங்கை சமூகம் மன்னாரில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சிறுமி : பல மாதங்களின் பின் சிக்கிய சந்தேகநபர்

மன்னாரில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சிறுமி : பல மாதங்களின் பின் சிக்கிய சந்தேகநபர்

0

மன்னாரில் (Mannar) பத்து வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதாகி தப்பியோடிய சந்தேகநபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (15) திருகோணமலை (Trincomalee) குச்சவெளி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் கடந்த பெப்பிரவரி மாதம் 15 ஆம் திகதி மாலை
காணாமல் போன அக்கிராமத்தைச் சேர்ந்த பத்து வயது சிறுமி தனது அம்மம்மாவின்
வீட்டில் இருந்து சுமார் 300 மீட்டர் தூரத்தில் உள்ள தென்னந்தோப்பில் இருந்து
மறு நாள் 16 ஆம் திகதி காலை சடலமாக மீட்கப்பட்டார்.

பாலியல் வன்கொடுமை

இதையடுத்து, சடலம் மீது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது குறித்த சிறுமி பாலியல்
வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை
தெரிய வந்தது.

குறித்த கொலை தொடர்பாக வெளி மாவட்டத்தில் இருந்து வருகை தந்து குறித்த
தோட்டத்தில் வேலை செய்து வந்த 55 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டு
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இதையடுத்து, கடந்த மே மாதம் வவுனியா வைத்தியசாலையில் சுகவீனம் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு
இருந்த நிலையில், வைத்தியசாலையில் இருந்து சந்தேகநபர் தப்பிச் சென்றார்.

தடுத்து வைத்து விசாரணை

இந்தநிலையில், குறித்த நபர் கடந்த ஆறு மாதங்களாக தலைமறைவாக வாழ்ந்து வந்த
நிலையில் நேற்று (15) திருகோணமலை குச்சவெளி பிரதேசத்தில்
காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தலைமன்னார் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, தலைமன்னார் காவல்துறையினர் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டதையடுத்து இன்றைய தினம் (16) காலை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய
அதிகாரியின் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இதன் பின்னர் மன்னார் நீதிமன்றத்தில் குறித்த நபர் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை
விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version