Home இலங்கை 1095 நாட்களை கடந்தும் தீர்வு இல்லை – மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்கள் மாபெரும் போராட்டம்

1095 நாட்களை கடந்தும் தீர்வு இல்லை – மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்கள் மாபெரும் போராட்டம்

0
image

 

மயிலத்தமடு – மாதவனை கால்நடைப் பண்ணையாளர்கள் தமது மேய்ச்சல் தரை உரிமையை வலியுறுத்தி சித்தாண்டி பிரதான வீதியில் முன்னெடுத்து வரும் போராட்டத்தின் மூன்றாவது ஆண்டு நிறைவையொட்டி இன்று (15) சித்தாண்டியில் மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சித்தாண்டி சந்திக்கு அருகில் முகாமிட்டு, மயிலத்தமடு – மாதவனை பண்ணையாளர்கள் தொடர்ச்சியாக தமது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 1095 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், தங்களுக்கான நிரந்தரத் தீர்வு இதுவரை கிடைக்கவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மயிலத்தமடு – மாதவனை பகுதியில் சட்டவிரோத பயிர்ச்செய்கையாளர்களின் அத்துமீறல்கள் தொடர்வதாகவும், இதனால் மேய்ச்சல் நிலங்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பண்ணையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். கால்நடைகள் மீதும் தாக்குதல்கள் இடம்பெற்று வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்றைய போராட்டத்தில் “மகாவலியே வெளியேறு”, “எமது நிலம் எமக்கு வேண்டும்”, “கால்நடைகளின் நிலத்தை அபகரிக்காதே”, “கால்நடைகளின் மேய்ச்சல் நில அபகரிப்பை தடுத்து நிறுத்து”, “தமிழருக்கு ஒரு சட்டம், சிங்களவருக்கு ஒரு சட்டமா?”, “சட்டத்தை சமமாக அமுல்படுத்து”, “ஜனாதிபதியின் வாக்குறுதியை நிறைவேற்றாதது ஏன்?”, “மகாவலி ஏன் மௌனம் காக்கிறது?” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பண்ணையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமது வாடிகள் அத்துமீறி குடியேறியவர்களால் தீக்கிரையாக்கப்படுவதை அடையாளப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்த குடிசையொன்றுக்கும் தீ வைத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மேலும், போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 1095 நாட்கள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த தீப்பந்தமும் ஏற்றப்பட்டது.

இதன்போது, ஒரு பண்ணையாளர் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் தலையில் பாலை ஊற்றியும் போராட்டத்தில் ஈடுபட்டார்.

மயிலத்தமடு – மாதவனை பண்ணையாளர்களின் அறவழிப் போராட்டம் மூன்று ஆண்டுகளைக் கடந்து நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள போதிலும், தங்களுக்கான நிரந்தரத் தீர்வு இன்னும் வழங்கப்படவில்லை என அவர்கள் கவலை தெரிவித்தனர்.

கடந்த மே மாதம் ஜனாதிபதி மட்டக்களப்பிற்கு விஜயம் செய்தபோது வழங்கிய வாக்குறுதிகளும் உத்தரவுகளும் இதுவரை அதிகாரிகளால் நடைமுறைப்படுத்தப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருவதாகவும் பண்ணையாளர்கள் குற்றம் சுமத்தினர்.

கடந்த 12 மற்றும் 13ஆம் திகதிகளில் தமது மேய்ச்சல் நிலங்கள் சட்டவிரோதமாக உழவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், உணவின்றி கால்நடைகள் உயிரிழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், பண்ணையாளர்களின் வாடிகளுக்குள் சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதாகவும், அண்மையில் 10க்கும் மேற்பட்ட கால்நடைகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும் பண்ணையாளர்கள் சுட்டிக்காட்டினர். இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடுகள் செய்யப்பட்ட போதிலும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் குற்றம் சுமத்தினர்.

சட்டம் இருவேறாகப் பிரயோகிக்கப்படுவதாகவும் பண்ணையாளர்கள் வேதனை தெரிவித்தனர். தமிழ் மக்கள் அல்லது பண்ணையாளர்கள் சிறிய தவறு செய்தாலும் வனவளத் திணைக்களம் ஊடாக உடனடியாக கைது செய்யப்படும் நிலையில், மேய்ச்சல் நிலங்களை சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என அவர்கள் குற்றம் சுமத்தினர்.

மேலும், ஜனாதிபதியின் அடுத்தகட்ட வருகைக்கு முன்னதாக, இன்னும் ஐந்து நாட்களுக்குள் சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றி பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், தமது அறவழிப் போராட்டத்தை “சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டமாக” மாற்றப்போவதாக பண்ணையாளர்கள் பகிரங்க எச்சரிக்கை விடுத்தனர்.

கால்நடைகளும் வாழ்வாதாரமும் முற்றாக அழிந்துபோனால், பண்ணையாளர்கள் வீதியில் இறங்கி பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்றும், அதற்கான பொறுப்பை அரசாங்கமும் மகாவலி அதிகார சபையும் ஏற்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

இந்தப் போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா. சிறிநேசன், வைத்தியர் இ. சிறிநாத், சிவில் சமூக செயற்பாட்டாளர்களான எஸ். சிவயோகநாதன், அருட்தந்தை லுக்காஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

போராட்டம் இடம்பெற்ற பகுதியில் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததுடன், பெருமளவான புலனாய்வுப் பிரிவினரும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.

Source: https://samugammedia.com/no-solution-even-after-1095-days–massive-protest-by-mayilathamadu-and-madhavan-farmers-1789467741

NO COMMENTS

Exit mobile version