11 பேருக்கு விசேட VIP பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் உண்மையல்ல என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று (14) நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர்,
அண்மையில் அசோக ரன்வல, முகமது ரிஸ்வி சாலி, சரத் குமார, அஜித் சாந்த, ருவன் விஜேவீர, திலங்க யு. கமகே, சுனில் பியான்வில, தினேஷ் ஹேமந்த, ரஞ்சித் மத்துமபண்டார, எச்.ஏ. தர்மசேன, கலகொடத்தே ஞானசார தேரர் உள்ளிட்டோருக்கு VIP பாதுகாப்பு வழங்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்ததாக குறிப்பிட்டார்.
இது தொடர்பாக விசேட பாதுகாப்பு பிரதி காவல்துறை மா அதிபர் (DIG) காவல்துறை மா அதிபருக்கு (IGP) அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளதாகவும், அதில் குறித்த நபர்களில் எவருக்கும் முக்கியப் பிரமுகர் (VIP) பாதுகாப்பு வழங்கப்படவில்லை என தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ கூறினார்.
எனவே, 11 பேருக்கு VIP பாதுகாப்பு வழங்கப்பட்டதாக வெளியான தகவல்கள் ஆதாரமற்றவை என்றும், அத்தகைய பாதுகாப்பு யாருக்கும் வழங்கப்படவில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.
