இலங்கை கடலில் அத்துமீறி உள்நுழைந்த குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 123 இந்திய ரோலர் படகுகளை அறிவித்தல் கிடைத்ததும் கடலில் புதைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை கடற்றொழில் நீரியல் வள திணைக்கள யாழ். மாவட்ட உதவி பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று (30.05.2025) யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுகூடத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடலின் கடற்தொழில் விடயதானங்களின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ரோலர் படகு
அவர் மேலும் தெரிவிக்கையில், “சுமார் 3 தொடக்கம் 4 வருடங்களாக யாழ். மயிலிட்டி துறைமுகத்தில் இந்திய அத்து மீறிய ரோலர் படகுககள் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.
இந்தப் படங்கள் தரித்து நிப்பதால் எமது உள்ளூர் மீனவர்கள் தமது படகுகளை கட்டுவதில் பாரிய இடர்பாடுகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
இதன் காரணமாக குறித்த படகுகளை கடலில் புதைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் கடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய உபகரணங்களை குறித்த ரோலர் படகுகளிலிருந்து அகற்றும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகிறது.
பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைத்ததும் கடலில் புதைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என அவர் மேலும் தெரிவித்தார்.
செய்தி : பு.கஜிந்தன்
