16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வது அல்லது கட்டுப்படுத்துவது தொடர்பான முன்மொழிவுகளை ஆராய்வதற்காக, சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு ஆரம்பக்கட்ட கலந்துரையாடல்களைத் தொடங்கியுள்ளதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று (08) உரையாற்றுகையில் பிரதமர் ஹரிணி அமரசூரிய இக்கருத்துகளைத் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களால் ஏற்படும் சமூக, மனநல மற்றும் உடல்நலத் தாக்கங்கள், டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் உலகளாவிய போக்குகள் ஆகியவை இந்தக் கலந்துரையாடல்களில் முக்கியமாக ஆராயப்படுவதாகப் பிரதமர் அமரசூரிய குறிப்பிட்டார்.
குழந்தைகளின் மன மற்றும் உடல் நலனைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட விழிப்புணர்வுப் பிரச்சாரங்களுடன், 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை அணுகுவதைத் தடை செய்வதற்கான தேசிய வழிகாட்டுதல்களை உருவாக்கும் பணிகளும் நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.
மேலும், 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அலைபேசி பயன்பாட்டு அடிமைத்தனத்திலிருந்து விடுபட உதவும் வகையில் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு ஒரு திட்டத்தைச் செயல்படுத்தி வருவதாகவும், அது ஏற்கனவே சாதகமான முடிவுகளைத் தந்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
Source: https://samugammedia.com/proposal-regarding-a-social-media-ban-for-those-under-16-1783504734
