இலங்கையில் வருடாந்தம் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான வழக்குகள் இணக்க சபைகள் ஊடாகத் தீர்த்து வைக்கப்படுவதாக நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
தேசிய இணக்க தின விழா நிகழ்வில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
2026ஆம் ஆண்டை இணக்க செயலாக்கத்திற்கான விசேட ஆண்டாகக் குறிப்பிட முடியும் எனத் தெரிவித்த அமைச்சர், இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக இணக்க சபை ஆணைக்குழுவிற்கு 800 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்த நிதி ஒதுக்கீட்டின் மூலம் தாமதமடைந்திருந்த பயிற்சிப் பட்டறைகளை நடத்துவதற்கும், சமரசாளர்களை உரிய முறையிலும் உரிய காலத்திலும் நியமிப்பதற்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், பிரதேச செயலகப் பிரிவு மட்டத்தில் செயற்படும் சமூக அடிப்படையிலான இணக்க சபைகளை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
காணி பிணக்குகளைத் தீர்ப்பதற்காக கடந்த வருடம் 25 மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் விசேட இணக்க சபைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், நீதிமன்றங்களை நாடும் நிதி சார்ந்த பிணக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில் விசேட நிதிப் பிணக்குகள் இணக்க சபைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இதன் முதற்கட்டமாக கொழும்பு, கம்பஹா, அநுராதபுரம், பொலன்னறுவை, கண்டி மற்றும் மொனராகலை ஆகிய ஆறு மாவட்டங்களில் விசேட நிதிப் பிணக்குகள் இணக்க சபைகளை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான திட்டங்களின் ஊடாக நீதிமன்றக் கட்டமைப்பின் மீதான அழுத்தத்தைக் குறைப்பதுடன், மக்களுக்கு விரைவான, நியாயமான மற்றும் அமைதியான முறையில் பிணக்குகளுக்குத் தீர்வு பெற்றுக்கொடுப்பதே தமது முக்கிய நோக்கம் என அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
மேலும், நாடு முழுவதும் எவ்வித இலாப நோக்கமுமின்றி அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வரும் 9,000க்கும் அதிகமான சமரசாளர்களின் சேவையைப் பாராட்ட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாடு முழுவதும் செயற்படும் 332 சமூக இணக்க சபைகள் மற்றும் 31 விசேட இணக்க சபைகளை ஒருங்கிணைத்து, இச்செயற்பாட்டிற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து வரும் இணக்க சபை ஆணைக்குழுவின் தலைவர், ஆணையாளர்கள், செயலாளர் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களுக்கும் அமைச்சர் தனது நன்றியையும் தெரிவித்தார்.
