2024 பொதுத் தேர்தல் தொடர்பாக, சுயேச்சைக் குழுக்களின் கட்டுப்பணம் மற்றும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களால் பரிந்துரைக்கப்படும் வேட்பாளர்களின் எண்ணிக்கை குறித்த தகவல்களை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
தொகுதிகளுக்குத் தெரிவு செய்யப்படவுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை, வேட்புமனுவின் மூலம் பரிந்துரைக்கப்படும் வேட்பாளர்களின் எண்ணிக்கை மற்றும் சுயேச்சைக் குழுவினால் செலுத்தப்பட வேண்டிய கட்டுப்பணம் தொடர்பான தகவல்களும் அதில் அடங்கும்.
இதன்படி, கம்பஹா மாவட்டத்தில் இருந்து அதிகளவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர். அந்த எண்ணிக்கை 19 ஆகும்.
பொதுத் தேர்தலுக்கு பணம்
மேலும், பொதுத் தேர்தலை நடத்துவதற்கு 1100 கோடி ரூபா தேவைப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பொதுத் தேர்தலுக்கு பணம் ஒதுக்கப்படாததால், அந்தத் தொகையை திறைசேரியிலிருந்து வழங்குவதற்கு அரசியலமைப்பின் மூலம் ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றம் கலைப்பு
இதற்கு ஜனாதிபதியே பொறுப்பு எனவும், பணத்தை வழங்குவதற்கு அவர் சட்டத்திற்கு கட்டுப்பட்டவர் எனவும் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியினால் திடீரென நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதையடுத்து எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.
Source: https://ibctamil.com/article/2024-general-election-updates-1727269983
