முள்ளிவாய்க்காலில் நடந்த தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் பிரித்தானியாவிலும் (United Kingdom) முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பிரித்தானியாவின் – சூபரிஈஸ்ட் கடற்கரையோரத்தில் நேற்று (17) மாலை இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது பிரித்தானியாவின் சவுத்என்டில் வசிக்கும் நூறுக்கும் மேற்பட்ட புலம்பெயர் தமிழர்கள் முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் 16 வருடத்தினை நினைவுகூர்ந்துள்ளனர்.
மிதக்கும் விளக்குகள்
அங்கு கூடிய தமிழ் மக்கள் 16 வருடங்களிற்கு முன்னர் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் அழிக்கப்பட்ட தங்கள் உறவுகளை நினைவுகூர்ந்து மலர்தூவி தமது அஞ்சலிகளை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவுரைகளும் நிகழ்த்தப்பட்டதுடன் முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சியும் பரிமாறப்பட்டது.
மேலும் உயிரிழந்த தமது உறவுகளை நினைவுகூரும் முகமாக நூற்றுக்கணக்கான மிதக்கும் விளக்குகள் கடலில் விடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
