உக்ரைன்(Ukraine) ரஸ்யாவிற்குள்(Russia) ஊடுருவியுள்ள நிலையில் 24 உக்ரைனிய வீரர்கள் குர்ஸ்க் பகுதியில் நடந்த சண்டையின் போது ரஷ்ய படைகளிடம் சரணடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனிய படைகள் தற்போது சர்வதேச எல்லைப் பகுதியை தாண்டி ரஷ்யாவிற்குள் புகுந்து தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில் ரஷ்யா மக்களை வேகவேகமாக நகர்த்தி வருகிறது.
குர்ஸ்க் பகுதியை முழுவதுமாக கைப்பற்றும் நோக்கில் தாக்குதல் நடத்தி வரும் உக்ரைனிய படைகள், சமீபத்தில் அமெரிக்கா அளித்துள்ள HIMARS ஏவுகணையை பயன்படுத்தி ரஷ்ய பிராந்தியத்தின் முக்கியமான பாலங்களில் ஒன்றை இரண்டாக உடைத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
தீவிரமடையும் மோதல்
இந்த பாலம் உக்ரைன் வடக்கு எல்லைப் பகுதியில் 6.8 மைல் தொலைவில் அமைந்துள்ளது.
ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் நடைபெற்ற சண்டையின் போது 22வது தனி இயந்திரமயமாக்கப்பட்ட படைப்பிரிவைச் சேர்ந்த 24 உக்ரைனிய வீரர்கள் ரஷ்ய ஆயுதப்படையிடம் சரணடைந்து இருப்பதாக அந்த நாட்டின் அரசு செய்தி ஊடகமான RIA Novosti தெரிவித்துள்ளது.
குர்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள Komarovka என்ற கிராமத்திற்கு அருகே இந்த 24 உக்ரைனிய வீரர்களும் சரணடைந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், வெள்ளிக்கிழமை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், குர்ஸ்க் பகுதியில் நடைபெற்ற சண்டையில் உக்ரைன் 2,860 இராணுவ வீரர்களையும், 41 டாங்கிகளையும் இழந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Source: https://ibctamil.com/article/24-ukrainian-troops-surrender-in-kursk-1723915062
