இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலையீட்டையடுத்து வெள்ள அனர்த்தத்தினால்
பாதிக்கப்பட்ட வீட்டை சுத்தப்படுத்துவதற்கான 25,000 ரூபாய் கொடுப்பனவுக்கு 18
வீடுகள் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
நவாலி கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் வெள்ளநீர் வீட்டுக்குள் உட்புகுந்த
வீட்டிற்கு அரசினால் வழங்கப்படும் 25,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படாமை
தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்திற்கு
முறைப்பாடு செய்யப்பட்டது.
இது தொடர்பில் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளரிடம் இலங்கை மனித உரிமைகள்
ஆணைக்குழு விளக்கம் கோரியிருந்தது.
மனித உரிமைகள்
இதன்படி பிரதேச செயலகத்தால் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய
அலுவலகத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
குறித்த அறிக்கையில், முறைப்பாட்டாளர் உட்பட்ட 18 வீடுகளுக்கான சேதவிபரம் சிபாரிசு
செய்யப்பட்டு அரசாங்க அதிபருக்கு நிதி ஒதுக்கீட்டுக்காக
அனுப்பப்பட்டுள்ளது எனவும் முறைப்பாட்டாளரோ அல்லது அவரது பிரதிநிதியோ நேரில்
சமூகமளிக்கும் போது வெள்ளநிவாரணம் தொடர்பான சுற்றுநிருபங்கள் மற்றும்
நிதிப்பிரமணம் என்பவற்றின்படி முறைப்பாட்டாளருக்கான கொடுப்பனவை வழங்க முடியும் எனவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முறைப்பாட்டாளர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட போது நேரில் வந்து உரிய
நடவடிக்கைகளை மேற்கொண்டு கொடுப்பனவை பெற்றுக்கொள்ளும்படி பிரதேச செயலாளரால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண
பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
