மன்னார்(Mannar) – பேசாலை பகுதியிலிருந்து கொழும்பு(Colombo) நோக்கி கடத்தப்பட்ட 28 கிலோ 760
கிராம் கேரளா கஞ்சா வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய பொலிஸாரால்
மீட்கப்பட்டுள்ளதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று (10.07.2024) அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய விசேட புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய
தகவலின் அடிப்படையில் வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலையிலான குழுவினரே
இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
பொலிஸ் விசாரணை
மன்னார், பேசாலை பகுதியிலிருந்து கூலர் ரக வாகனம் ஒன்றில் சூட்சுமமான முறையில்
மறைத்து வைக்கப்பட்டு கொழும்பு நோக்கி கடத்தப்பட்ட போதே பொலிஸார் கேரளா கஞ்சாவை
கைப்பற்றியுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கையின் போது கடத்தலுக்கு பயன்படுத்திய கூலர் ரக வாகனத்தை பொலிஸார் மீட்டுள்ளதுடன், சந்தேக
நபர்களான பேசாலை பகுதியை சேர்ந்த 27 மற்றும் 30 வயதுடையை இரண்டு இளைஞர்களையும்
கைது செய்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்டவர்களை மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா நீதவான்
நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.