Home இலங்கை 4 வயது சிறுமியைத் தாக்கி கைவிட்ட தாய், காதலனுடன் கைது – கண்டியில் சம்பவம்

4 வயது சிறுமியைத் தாக்கி கைவிட்ட தாய், காதலனுடன் கைது – கண்டியில் சம்பவம்

0
image

கண்டி, வத்தேகம – யட்டிராவன பகுதியில் நான்கு வயது சிறுமியைத் தாக்கி, ஆள்நடமாட்டமற்ற பகுதியில் கைவிட்டுச் சென்றதாகக் கூறப்படும் சிறுமியின் தாய் மற்றும் அவரது காதலன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வத்தேகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யட்டிராவன வீதியில் உள்ள பாழடைந்த பகுதியில் சிறுமியொருவர் தனியாக கைவிடப்பட்டிருப்பதாக பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்திற்கு நேற்று (13) தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற வத்தேகம பொலிஸார், தாக்குதலுக்கு உள்ளான நிலையில் காணப்பட்ட சிறுமியை மீட்டு, மேலதிக சிகிச்சைக்காக கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

முச்சக்கரவண்டியொன்றில் வந்த சிலர், காலை 7 மணியளவில் சிறுமியை குறித்த பகுதியில் கைவிட்டுச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகித்துள்ளனர். இதனையடுத்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள CCTV காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், சம்பவம் தொடர்பான தகவல்கள் சமூக ஊடகங்கள் மற்றும் ஊடகங்களில் வெளியாகியதைத் தொடர்ந்து, சிறுமியின் தந்தை வத்தேகம பொலிஸ் நிலையத்திற்கு வந்து தனது மகளை அடையாளம் கண்டுள்ளார்.

மாத்தளை – மாவனெல்ல, ஹிங்குல பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமியின் தந்தை, சுமார் ஏழு மாதங்களுக்கு முன்னர் தனது மனைவி குறித்த சிறுமியையும் அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். சிறுமியின் இளைய சகோதரன் தற்போது தந்தையின் பராமரிப்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமியிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின்போது, தன்னைத் தாக்கியது தனது தாயுடன் வசித்து வந்த நபர் எனத் தெரிவித்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இதனையடுத்து, சிறுமியை தாக்கி கைவிட்டுச் சென்றதாக சந்தேகிக்கப்படும் அவரது தாயும் குறித்த நபரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரிடமும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், சம்பவம் தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

சிறுமி தாக்கப்பட்டு கைவிடப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வத்தேகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Source: https://samugammedia.com/mother-who-assaulted-4-year-old-girl-arrested-with-boyfriend—incident-in-kandy-1786703967

NO COMMENTS

Exit mobile version