Home இலங்கை 53,000 ஐ கடந்த டெங்கு நோயாளர்கள்!

53,000 ஐ கடந்த டெங்கு நோயாளர்கள்!

0
image

நாட்டிற்குள் டெங்கு நோய் பரவல் தற்போது தீவிரமடைந்து வருகின்றது. 

இந்த ஜூன் மாதத்தில் நேற்றைய தினம் வரையில் மாத்திரம் 19,318 டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்ததுடன், இதனுடன் இவ்வருடத்தில் இதுவரையில் பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 53,000 ஐத் தாண்டியுள்ளது. 

அதற்கமைய, வருடத்தின் 25ஆவது வாரம் நிறைவடையும் போது, நாட்டின் 124 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அதி அபாய வலயங்களாகப் பெயரிடப்பட்டுள்ளன. 

தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு இன்று காலை வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த வருடத்தின் ஜனவரி முதலாம் திகதி முதல் நேற்று வரையிலான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 53,159 ஆகும். 

அத்துடன் டெங்கு நோய் காரணமாக மரணித்தவர்களின் எண்ணிக்கை 31 ஆகும். 

வருடத்தின் கடந்த முதல் 5 மாதங்களிலும் மாதமொன்றில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்திற்கும் குறைவான மட்டத்திலேயே காணப்பட்ட போதிலும், ஜூன் மாதத்தின் கடந்த 28 நாட்களில் மாத்திரம் 19,318 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். 

அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் பதிவான மாகாணமாக மேல் மாகாணத்தில் காணப்படுகின்றது. மேல் மாகாணத்தில் 27,833 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என்பதுடன், இது சதவீத அடிப்படையில் 52.36% ஆகும். 

தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில் டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, நுளம்புகள் பெருகுவதைத் தடுப்பதற்கும் நுளம்பு முட்டைகள் மற்றும் புழுக்களை அழிப்பதற்கும் தங்களது சூழலைத் தூய்மையாக வைத்திருப்பது குறித்து தீவிர கவனம் செலுத்துமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

Source: https://samugammedia.com/dengue-cases-cross-53000-1782727270

NO COMMENTS

Exit mobile version