Home இலங்கை சமூகம் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதில் சிரமம் : மன்னார் அரசாங்க அதிபர்

பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதில் சிரமம் : மன்னார் அரசாங்க அதிபர்

0

யுத்தத்திற்கு பிறகான மீள் குடியேற்றத்தின் பின்னர் நாங்கள் எதிர்
நோக்குகின்ற முக்கியமான பிரச்சினையாக பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவதே உள்ளது என மன்னார் (Mannar) மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (25.06.2024) இடம்பெற்ற உண்மை
ஒற்றுமை மற்றும் நல்லிணக்க பொறிமுறைகளுக்கான இடைக்கால செயலகத்தின் உத்தேச
சட்ட வரைவை நிறுவுவதற்கான சந்திப்பில் கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக மன்னார் மாவட்டமும்
பாதிக்கப்பட்டிருந்தது. மீள்குடியேற்றத்தின் பின்னர் நாங்கள் எதிர் நோக்குகின்ற
முக்கியமான பிரச்சினையாக பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவது உள்ளது.

விவசாய விருத்தி

மன்னார் மாவட்டத்தில் முக்கியமான வாழ்வாதார செயற்பாடாக விவசாயம்
காணப்படுகின்றது. விவசாயத்தை விருத்தி செய்ய பல்வேறு சவால்களுக்கு முகம்
கொடுக்கின்றோம்.

யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் வன வள திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம்
கிட்டத்தட்ட 36 வீதம் காணிகளை பிடித்துள்ளனர்.

மேலதிகமாக புதிதாக 30 வீத காடுகளை உருவாக்கி உள்ளனர்.

இவர்கள் ஜீ.பி.எஸ்.
மற்றும் கூகுள் படம் ஊடாக நூறுக்கு மேற்பட்ட விவசாய குளங்களை தமது
எல்லைக்குள் அடையாளப்படுத்தி உள்ளமையினால் விவசாய அபிவிருத்தியை புனரமைப்பு
செய்ய முடியாத நிலை காணப்படுகிறது.

இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியேறிய பின்னர் தமது விவசாய நிலங்களை மீள
பெற்றுத்தருமாறு கோருகின்றனர்.

அதன் அடிப்படையில் குறிப்பிட்ட விவசாய நிலங்களை தற்போது வன வள திணைக்களத்திடம்
இருந்து மீள பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது.

உரிய ஆதாரம் 

இதனால், மீள்குடியேறி பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

நல்லிணக்க அடிப்படையில் அவர்களின் நிலங்களை மீள வழங்குவதில் நாங்கள் சவால்களை
எதிர் நோக்குகிறோம்.

1980ஆம் ஆண்டு இடம் பெயர்ந்ததன் காரணமாக பொதுமக்களினால்
பயன்படுத்தப்பட்ட இடங்கள் கூட சிறு காடுகளாக காணப்படுகிறன.

இதன் காரணமாக 12 ஆயிரம் ஹெக்டர் நிலத்தை குறித்த திணைக்களத்திடம் உரிய
ஆதாரத்துடன் சமர்ப்பித்து பொதுமக்களின்
1500 ஹெக் டயர் காணிகளே விடுவிக்கப்பட்டுள்ளன.

பொதுமக்களினால் அடையாளம் காணப்பட்ட ஏனைய நிலங்களை விடுவிக்க முடியாத நிலை
காணப்படுகிறது” என சுட்டிக்காட்டியுள்ளார். 

இதேவேளை, குறித்த குழுவினர் அரச அரச சார்பற்ற அமைப்புகளின்
பிரதிநிதிகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் உட்பட பல்வேறு
தரப்புக்களையும் சந்தித்து உண்மை ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின்
உத்தேச சட்ட வரைவு குறித்து கலந்துரையாடி உள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version