Home இலங்கை சமூகம் பன்றி இறைச்சி வாங்குவோருக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

பன்றி இறைச்சி வாங்குவோருக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

0

மேல் மாகாணத்தில் உள்ள பன்றி பண்ணைகள் சிலவற்றில் வேகமாக வைரஸ் தொற்று பரவி வருவதாகவும் இவ்வாறு வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு இறக்கும் பன்றிகள், இறைச்சியாக விற்பனை செய்யப்படுவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், வைரஸால் பாதிக்கப்பட்டு இறக்கும் பன்றிகளின் இறைச்சியை குளிர்சாதன பெட்டிகளில் சேமித்து வைத்து கிலோ 300 முதல் 400 ரூபாய் வரை விற்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜாஎல பிரதேச சபையில் இடம்பெற்ற கூட்டத்தில், ததுகம பிரதேசத்தில் பன்றி பண்ணைகளில் பன்றிகள் உயிரிழந்தமை குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

பன்றிகளின் இறைச்சி

அந்த பகுதியில் உள்ள பன்றி பண்ணைகளில் தினமும் சுமார் 50 பன்றிகள் இறக்கின்ற நிலையில் அந்த பன்றிகளின் இறைச்சி குறைந்த விலைக்கு மனித நுகர்வுக்கு விற்கப்படுவதாகவும் இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் பன்றிப் பண்ணைகளில் உள்ள பன்றிகளுக்குள் வைரஸ் தொற்று பரவி வருகின்றதாக அரசாங்க கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சிசிர பியசிறி (Sisira Piyasiri) தெரிவித்துள்ளார்.

கால்நடை மருத்துவர்

இந்த வைரஸ் சிறுநீர் மற்றும் உமிழ்நீர் துளிகள் போன்றவற்றின் மூலம் பன்றிகளுக்கு பரவுகிறது என்றும் விலங்குகளுக்கு சுவாசிப்பதில் சிரமம், நுரையீரல் செயலிழப்பு, காய்ச்சல் மற்றும் பசியின்மை போன்றவற்றை இந்த வைரஸ் உண்டாக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, கருவுற்ற கால்நடைகளுக்கு கருக்கலைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் இந்த வைரஸ் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவுமா என்பதை பரிசோதிக்கும் திறன் கால்நடை மருத்துவர்களுக்கு உள்ளது என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version