மன்னார் (Mannar) – யாழ் (Jaffna) பிரதான வீதியில் பாரிய விபத்து சம்பவமான்று இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்து மன்னார் – யாழ் பிரதான வீதியில் கள்ளியடி பகுதியில் இன்று (03) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மன்னாரில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் கடமையாற்றும் பணியாளர்களை ஏற்றி வந்த
தனியார் பேருந்து கள்ளியடி பகுதியில் பணியாளர்களை ஏற்றுவதற்காக வீதிக்கு
அருகில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கோர விபத்து
இதன் போது குறித்த பேருந்துக்கு நேர் எதிரே அதிவேகமாக வந்த ஹென்டனர் ரக வாகனம்
கட்டுப்பாட்டை இழந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குறித்த பேருந்துடன் மோதியுள்ளது.
அத்தோடு, குறித்த வீதியில் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த ஒருவர் மீதும் மோதி
பாரிய விபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன் போது மோட்டார் சைக்கிலில் நின்ற நபர் காயமடைந்ததுடன், அவரது மோட்டார்
சைக்கிலும் பலத்த சேதமடைந்துள்ளது.
மேலதிக விசாரணை
இதனுடன், குறித்த விபத்தில் ஹென்டனர் ரக வாகனத்தின் சாரதி மற்றும் உதவியாளர் ஆகிய இருவரும்
படுகாயமடைந்துள்ளனர்.
அத்தோடு, ஆடை தொழிற்சாலை பணியாளர்கள் ஒன்பது பேரும்
காயமடைந்துள்ளனர்.
இதையடுத்து, காயமடைந்தவர்கள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து குறித்து இலுப்பைக்கடவை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை
மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
