கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட விவசாய இழப்புக்கான
உதவித் தொகையை வழங்குவதற்காக விவசாயத் திணைக்களமும் கமநல அபிவிருத்தித்
திணைக்களமும் இணைந்து துரித நடவடிக்கை எடுத்திருப்பதாக விவசாயத்
திணைக்களத்தின் கிழக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர் எம்.எஸ்.றினூஸ்
தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட நெற்செய்கை இழப்புக்கான உதவித் தொகையை வழங்குவதற்காக கடந்த 9ஆம்
திகதியிலிருந்து அழிவு மதிப்பீட்டுப் படிவங்களை விவசாயிகளுக்கு வழங்கி தகவல்
திரட்டப்பட்டுள்ளன.
அதேவேளை, மறுவயல் பயிர்கள், பழப்பயிர்கள், மரக்கறிப் பயிர்கள் என்பனவற்றுக்கான
அழிவு மதிப்பீடுகளை நேரடியாக விவசாயத் திணைக்களமே மேற்கொண்டு வருகின்றது.
இழப்பீடு
இந்த தகவல்களைத் திரட்டி அவற்றை அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தி நாங்கள்
டிசம்பர் 15ஆம் திகதி அனுப்பி வைக்க வேண்டும்.
அதன் பின்னர் பேராதனையிலுள்ள
விவசாயத் திணைக்களத் தலைமைக் காரியாலயத்தின் மூலமாக விவசாயிகள் தங்களுக்கான
இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக் கொள்வார்கள்.
தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் துரித விவசாய மீளமைப்பு நடவடிக்கைகளின்
பயனாக, இந்த மாத இறுதிக்குள் விவசாயிகள் தங்களுக்கு ஏற்பட்ட அழிவுக்கான
இழப்பீடுகளைப் பெற்றுக் கொள்வார்கள்.
விவசாய நடவடிக்கை
மேலும், அழிவடைந்த விவசாய நிலங்களில் மீள் நடுகையும் உடனடியாக
ஆரம்பிக்கப்படவுள்ளது.
மீள் நடுகைக்கான கலப்பின மரக்கறி விதைகள் நடுகைக்கான
தானியங்கள் உள்நாட்டில் கிடைக்காவிட்டால், அவற்றை வெளிநாடுகளிலிருந்தும்
உடனடியாக இறக்குமதி செய்து விவசாயிகளுக்கு வழங்க துரித கதி நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, அழிவுகளைக் கண்டு சோர்வடையாத விவசாயிகள் ஏற்கெனவே, தாங்களாகவே
முன்வந்து, சுய முயற்சியில் மீளவும் விவசாய நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளார்கள்.
இது நம்பிக்கை தருவதாக அமைந்திருக்கிறது என அவர் தெரிவித்தார்.
