கனரக மற்றும் சிறிய ரக வாகனங்களின் சாரதிகள் அனைவரும் வீதிகளில் வாகனங்களை செலுத்தும் போது கட்டாயமாக இருக்கைப் பட்டையை (Seat belt) அணிந்திருத்தல் வேண்டும் என போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டில் இடம்பெறும் வீதி விபத்துக்களை குறைப்பதற்காகவும் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காகவும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருக்கைப் பட்டையை அணிந்து வாகனங்களை செலுத்தும் போது வீதி விபத்துக்கள் ஏற்படுவதை குறைக்க முடியும் என போக்குவரத்து அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
பயணிகளும் அணிய வேண்டும்
அத்துடன் ஜூலை 01 ஆம் திகதி முதல் அனைத்து வாகனங்களின் சாரதிகளும் இந்த விதிமுறையை பின்பற்ற வேண்டும் என போக்குவரத்து அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
அத்துடன் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 01ஆம் திகதியிலிருந்து சிறிய ரக வாகனங்களின் பின் இருக்கைகளில் அமர்ந்திருக்கும் பயணிகள் அனைவரும் இருக்கைப் பட்டையை அணிய வேண்டும்.
இதேவேளை, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 01ஆம் திகதியிலிருந்து கனரக மற்றும் சிறிய ரக வாகனங்களில் பயணிக்கும் அனைத்து பயணிகளும் இருக்கைப் பட்டையை அணிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
