கந்தளாய் மதுரசா நகரில் அமைந்துள்ள அந்நூர் பொது மைதானம் ஆனது, உரிய பராமரிப்பின்மையாலும்,
வடிகால்களின் சீரழிவாலும் அழிவின் விளிம்பில் இருப்பதாக அந்தப் பகுதி மக்கள் பெரும் கவலை
தெரிவித்துள்ளனர்.
மழைக்காலங்களில் வடிகால்கள் வழியாக வரும் நீரின் தீவிரத்தினால் மைதானத்தின் ஒரு பகுதி இடிந்து
போகும் அபாயத்தில் இருப்பதாக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, மைதானத்திற்கு அருகில் உள்ள வடிகான் முன்னர் சாதாரண அகலத்திலேயே இருந்ததாகவும்,
தற்போது மண் அரிப்பின் காரணமாக பதினைந்து அடி அகலத்திற்கு விரிவடைந்துள்ளதாகவும், இதுவே
மைதானம் அழிந்து போவதற்கான பிரதான காரணமாக அமையும் என்றும் அப்பகுதி மக்கள் குற்றம்
சாட்டுகின்றனர்.
அபிவிருத்திப் பணி
மதுரசா நகர் கிராமத்தில் சுமார் ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் பேசும் மக்கள் வசித்து
வருகின்றனர். அவர்களுக்கு ஒரேயொரு பொது இடமாக இந்த அந்நூர் மைதானமே உள்ளது.
தற்போது மைதானம்
இடிந்து போகும் நிலையில் இருப்பதால், பொது நிகழ்ச்சிகள் மற்றும் இளைஞர்களின் விளையாட்டுத்
தேவைகளுக்கான இடம் இல்லாமல் போகும் சூழல் உருவாகியுள்ளது.
கடந்த இருபத்தைந்து வருடங்களாக இந்த மைதானத்திற்கு எந்தவிதமான அபிவிருத்திப் பணிகளும்
மேற்கொள்ளப்படவில்லை என மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
மக்கள் வேண்டுகோள்
“கடந்த கால அரசாங்கத்திலும் சரி, இந்த அரசாங்கத்திலும் சரி, இதுவரைக்கும் இந்த மைதானத்தை
பாதுகாக்க எந்தவொரு முயற்சியும் செய்யவில்லை.
இதனால் மைதானம் வரும் காலங்களில் முற்றிலுமாக
அழிந்து போகும் நிலை உள்ளது,” என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அந்நூர் பொது மைதானத்தை அழிவிலிருந்து காப்பாற்றவும், அதனைச் சுற்றியுள்ள வடிகானை
சீரமைக்கவும், நிரந்தர அபிவிருத்தி நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட
அதிகாரிகள் மற்றும் அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்குமாறு மதுரசா நகர் மக்கள் வேண்டுகோள்
விடுத்துள்ளனர்.
