அம்பாறை, மகாஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொரபொல பிரதேசத்தில் கூரிய
ஆயுதத்தால் தாக்கப்பட்டு இராணுவச் சிப்பாய் ஒருவர் படுகொலை
செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கொலைச் சம்பவம் நேற்றுமுன்தினம்(4) இரவு இடம்பெற்றுள்ளது என்று
மகாஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணை
மின்னேரியா இராணுவ முகாமில் கடமையாற்றிய இராணுவ மகாஓயா , சமகிபுர பிரதேசத்தைச்
சேர்ந்த 31 வயதுடைய இராணுவச் சிப்பாயே கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மேற்படி இராணுவச் சிப்பாய், மின்னேரியா பீரங்கிப் படைப் பிரிவில் கடமையாற்றும்
இராணுவச் சிப்பாயின் மனைவியுடன் நீண்ட காலமாக தகாத உறவில் இருந்துள்ளார்.
நேற்று இரவும் மேற்படி இராணுவச் சிப்பாய், சக இராணுவச் சிப்பாயின் மனைவியுடன்
வீட்டில் ஒன்றாக இருந்துள்ளார்.
இதன்போது வீட்டுக்குச் சென்ற கணவரான இராணுவச் சிப்பாய், தனது மனைவியுடன்
ஒன்றாக இருந்த இராணுவச் சிப்பாயைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிப் படுகொலை
செய்துள்ளார்.
இதனையடுத்து 34 வயதுடைய சந்தேகநபரான இராணுவச் சிப்பாய் பொலிஸாரால் கைது
செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மகாஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
