Home இலங்கை சமூகம் பாலச்சந்திரன் – இசைப்பிரியா படுகொலை : நீதிமன்றத்தை நாடவுள்ள சிங்கள சட்டத்தரணி

பாலச்சந்திரன் – இசைப்பிரியா படுகொலை : நீதிமன்றத்தை நாடவுள்ள சிங்கள சட்டத்தரணி

0

இலங்கையின் இறுதி யுத்தத்தின்போது, சர்வதேச மனிதாபிமானச் சட்டம் கடுமையாக மீறப்பட்டுள்ளதாக, காவல்துறை தலைமையகத்துக்கு அளிக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில், நீதிமன்றத்தை நாடவுள்ளதாக முறைப்பாட்டாளரான சட்டத்தரணி தனுக ரணஞ்சக கஹந்தகமகே தெரிவித்துள்ளார்.

தமது முறைப்பாடு குறித்து, காவல்துறையினர் இதுவரையில் உரிய பதில் வழங்காமையினால், மேன்முறையீட்டு நீதிமன்றத்தை நாடி, நீதிப்பேராணை மனுவொன்றைத் தாக்கல் செய்யவுள்ளதாக முறைப்பாட்டாளர் தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். 

அதற்கமைய, எதிர்வரும் வாரத்தை மாத்திரம் காவல்துறையினருக்கான கால அவகாசமாக வழங்கவுள்ளதாகவும், அதற்குள் பதில் கிடைக்காவிடின் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

சட்டத்தரணி

தனுக ரணஞ்சக கஹந்தகமகே என்ற சட்டத்தரணியினால், கடந்த ஜூன் மாதம் 13 ஆம் திகதி இசைப்பிரியா மற்றும் பாலச்சந்திரனின் மரணம் தொடர்பான முறைப்பாடு, பதில் காவல்துறைமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. 

மேலதிக நடவடிக்கைகளுக்காக, குறித்த முறைப்பாடு சட்டப்பிரிவுக்குப் பொறுப்பான பிரதி காவல்துறைமா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டதாக ஏற்கனவே, சட்டத்தரணிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

இறுதிப்போரின் போது, சரணடைந்தவர்கள், சட்டவிரோதமாகக் கொல்லப்பட்டுள்ளதாகக் குறித்த முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இதில், பிரதானமாக, இசைப்பிரியா எனப்படும் ஷோபா மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் ஆகியோர் கொல்லப்பட்ட சம்பவங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. 

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த இசைப்பிரியா 2009 ஆம் ஆண்டு மே மாதம் உயிருடன், நிராயுதபாணியாக, காவலில் இருந்ததாகவும், பின்னர் சந்தேகத்திற்கிடமான நிலையில் இறந்து கிடந்ததாகவும் காணொளி ஆதாரங்கள் காட்டுவதாகக் குறித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இசைப்பிரியா – பாலச்சந்திரன் கொலை

இந்தக் காட்சிகளின் அடிப்படையில், அவர் பாலியல் வன்புணர்வு மற்றும் மரணதண்டனை பாணியில் கொலை செய்யப்பட்டார் என்பதற்கான தடயங்களைக் காணமுடிகிறது. 

அதேநேரம், 12 வயதுடைய பாலச்சந்திரன், உயிருடன் ஆயுதமேந்திய படையினர் வசமிருந்தமையும், பின்னர் அவர் மார்பில் துப்பாக்கிச்சூட்டுக் காயங்களுடன் உயிரிழந்து காணப்படுவதையும் காட்டும் புகைப்படங்கள் உள்ளன. 

இதுபோன்ற செயல்கள் நிரூபிக்கப்பட்டால், சர்வதேசச் சட்டத்தின் கீழ், அவை போர்க்குற்றங்களாகக் கருதப்படும் எனவும், ஜெனீவா உடன்படிக்கைகள் மற்றும் ரோம் சாசனம் ஆகிய இரண்டையும் மீறுவதாக உள்ளதாகவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்தநிலையில், இலங்கை காவல்துறையினர் இந்தச் சம்பவம் குறித்து, உண்மை மற்றும் பொறுப்புடன், நியாயத்துக்கு வழிவகுக்கும் வகையில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று முறைப்பாட்டாளரான, சட்டத்தரணி தனுக ரணஞ்சக கஹந்தகமகே கோரியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version