போர் – இடப்பெயர்வுக்கு முன்னர் பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கையில் எப்படியொரு
சமநிலை இருந்ததோ அதைப் போன்ற ஒரு நிலையை உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்
என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கீரிமலை நகுலேஸ்வர மகா வித்தியாலய பரிசளிப்பு விழாவில் நேற்றையதினம்(01) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“வலி.
வடக்கு பிரதேசம் யாழ்ப்பாண மாவட்டத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பிரதேசம்.
மக்களின் காணிகள் இன்னமும் விடுவிக்கப்பட வேண்டியுள்ளன. பல குடும்பங்கள் இங்கு
வந்து மீளக்குடியமர வேண்டியிருக்கின்றார்கள். விடுவிக்கப்பட்ட பகுதிகளில் கூட
மக்களை இன்னமும் குடியமர்த்த வேண்டிய தேவை இருக்கின்றது.
வளப் பற்றாக்குறைகள்
இடப்பெயர்வின் பின்னர் சொந்த இடத்தில் அடிப்படை வசதிகள் இல்லாது
ஆரம்பிக்கப்பட்ட உங்களின் பாடசாலை இன்று படிப்படியாக
வளர்ச்சியடைந்திருக்கின்றது. இந்தப் பாடசாலையில் பணியாற்றிய அதிபர் மற்றும்
ஆசிரியர்களின் சரியான தலைமைத்துவமே அதற்குக் காரணம்.
அன்று அதிக மாணவர்களை கொண்டு இயங்கிய பாடசாலைகள் கூட இன்று இயங்க முடியாமல்
மூடவேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் நகரப் பகுதியை நோக்கி
போரால் இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் இப்பகுதிக்கு வருவதற்கு விரும்பவில்லை.
வலி. வடக்கை பொறுத்தவரை பாடசாலைகளில் வளப் பற்றாக்குறைகள் இருக்கின்றன. அதனை
நிவர்த்தி செய்ய வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது.
இந்த வருடம் நிதி
ஒதுக்கபட்டுவிட்டதால் அடுத்த வருடம் கிடைக்கும் நிதியில் இந்தப் பகுதி
பாடசாலைகளின் கோரிக்கைகளை நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
