Home இலங்கை கல்வி ஆரம்பமாகவுள்ள உயர்தரப் பரீட்சை : இன்று நள்ளிரவு முதல் விதிக்கப்படும் தடை

ஆரம்பமாகவுள்ள உயர்தரப் பரீட்சை : இன்று நள்ளிரவு முதல் விதிக்கப்படும் தடை

0

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான தனியார் வகுப்புக்கள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகள் அனைத்திற்கும் இன்று (04) நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படவுள்ளது.

அதன்படி, பரீட்சைகள் நிறைவடையும் வரை குறித்த தடை நடைமுறையில் இருக்கும் என்று பரீட்சைகள் திணைக்களம் (Department of Examinations) அறிவித்துள்ளது.

2025ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 10 ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் மாதம் 5ஆம் திகதி வரை நடத்தப்படவுள்ளது.

 பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்

இந்த முறை நாடு முழுவதும் 2,362 பரீட்சை நிலையங்களில், 340,525 மாணவர்கள் இந்தப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள நிலையில் பாடசாலை விண்ணப்பதாரர்கள் 246,521 பேரும், தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் 94,004 பேரும் தோற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை உயர்தரப் பரீட்சைக்கு மாணவர்கள் அமைதியாக முகங்கொடுக்கத் தேவையான சூழலை அமைத்துக்கொடுக்குமாறு, பெற்றோர்களிடம் கோரிக்கை விடுப்பதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ. கே. எஸ். இந்திகா குமாரி லியனகே (Indika Kumari Liyanage) தெரிவித்துள்ளார்.

அத்துடன் மாணவர்களை நல்ல மனநிலையுடன் பரீட்சைக்கு தயார்ப்படுத்துமாறும் வலியுறுத்திய அவர், மாணவர்கள், தமக்கு வழங்கப்பட்டுள்ள நேர அட்டவணைக்கு அமையப் பரீட்சைக்கு நன்கு தயாராகுமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் கிடைக்கப்பெறாதவர்கள் இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குச் சென்று அதனைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/ban-all-private-classes-for-al-exams-from-tonight-1762228450

NO COMMENTS

Exit mobile version