பேரனர்த்தத்தின் போது ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களின் பிறப்பு மற்றும் திருமணப் பதிவுச் சான்றிதழ்கள் அழிக்கப்பட்டுள்ளதாகப் பதிவாளர் நாயகத் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்குப் புதிய பிறப்பு மற்றும் திருமணச் சான்றிதழ்களை வழங்குவதற்காக நடமாடும் சேவைத் திட்டங்கள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகப் பதிவாளர் நாயகம் சசிதேவி ஜல்தீபன் தெரிவித்துள்ளார்.
அண்மைய பேரிடரால் பாதிக்கப்பட்ட கிட்டத்தட்ட 2.2 மில்லியன் மக்களில், பாதிக்கும் மேற்பட்டோர் இந்த முக்கியமான ஆவணங்களை இழந்துள்ளதாக அத்திணைக்களம் மதிப்பிட்டுள்ளது.
மரணச் சான்றிதழ்
இந்த முயற்சியின் கீழ், பேரிடரால் பாதிக்கப்பட்ட 22 மாவட்டங்களில் பதிவுச் சான்றிதழ்கள் இலவசமாகவும், ஒரு நாள் துரித சேவை மூலமாகவும் வழங்கப்படுகின்றன.
அத்துடன், மண்சரிவு மற்றும் வெள்ளத்தில் உயிரிழந்த அல்லது காணாமல் போன நபர்களுக்கான மரணச் சான்றிதழ்களை வழங்குவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அரசின் க்ளீன் சிறிலங்கா திட்டத்தின் கீழ் சில பகுதிகளில் நடமாடும் சேவைத் திட்டமும் செயற்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
நடமாடும் சேவை
சான்றிதழ்கள் வழங்குவதற்கு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் தேவையான ஆதரவை வழங்கி வருவதாகவும், சில சந்தர்ப்பங்களில் அரசாங்க சார்பற்ற நிறுவனங்களும் உதவி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதுவரை, கொட்டாவ மற்றும் கண்டி மாவட்டத்தில் நடமாடும் சேவைத் திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ள நிலையில் பிறப்பு மற்றும் திருமணச் சான்றிதழ்கள் இல்லாதவர்கள் குறித்த தரவுகளை மாவட்ட துணைப் பதிவாளர்கள் தற்போது சேகரித்து வருகின்றனர்.
அடுத்த ஆண்டு ஜனவரி மாத இறுதிக்குள் இந்தப் பதிவேடுகளை வழங்கும் பணியை நிறைவு செய்யத் திணைக்களம் இலக்கு நிர்ணயித்துள்ளதாக பதிவாளர் நாயகம் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
