கண்டி, அங்கும்புர – கல்கந்த பகுதியில் மண்சரிவு அபாயம் காரணமாக ஆட்கள் எவரும் இன்றி இருந்த வீடொன்றிலிருந்து, அடையாளம் காண முடியாத அளவிற்கு எரியுண்ட நிலையில் நபர் ஒருவரின் உடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த உடலம் நேற்றையதினம்(23.12.2025) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
குறித்த வீட்டின் உரிமையாளர்கள் அந்த பகுதியில் நிலவிய மண்சரிவு அபாயம் காரணமாக, சில நாட்களுக்கு முன்னர் வீட்டைப் பூட்டிவிட்டு நீர்கொழும்பு பகுதியில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.
நேற்றுமுன்தினம்(22) காலை வீட்டின் அருகே வசிக்கும் உறவினர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில், உரிமையாளர்கள் மதியம் வீட்டுக்கு சென்று பார்த்துள்ளனர்.
இதன்போது, வீட்டின் உட்புறத்தில் அடையாளம் காண முடியாத நிலையில் மனித உடலமொன்று எரிந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், அங்கும்புர பொலிஸாருக்குத் தகவல் வழங்கினர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த அங்கும்புர பொலிஸார் உடலத்தை மீட்டதுடன், மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
