Home இலங்கை குற்றம் கொழும்பில் உயிரிழந்த மாணவன், மாணவி – பொலிஸார் வெளியிட்ட தகவல்கள்

கொழும்பில் உயிரிழந்த மாணவன், மாணவி – பொலிஸார் வெளியிட்ட தகவல்கள்

0

கொழும்பில் நேற்று உயிரை மாய்த்துக் கொண்ட மாணவர்கள் தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

15 வயதான குறித்த இருவரும் காதல் தொடர்பில் இருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கொம்பனிவீதி அல்டைர் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பின் 67வது மாடியில் இருந்து நேற்றிரவு (02) விழுந்து 15 வயதுடையவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சிசிடிவி காட்சிகள் பரிசோதிக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று பாடசாலை முடிந்ததும், சொகுசு அடுக்குமாடி குடியிருப்பின் ஐந்தாவது மாடியில் அமைந்துள்ள உடற்பயிற்சி மையத்துக்கு இருவரும் சென்றுள்ளனர்.

அங்கு உடைகளை மாற்றிக்கொண்டு, காலணிகளை கழற்றி வைத்துவிட்டு, பாடசாலை பைகளை உடற்பயிற்சி மையத்திற்குள் வைத்துவிட்டு, உடற்கட்டமைப்பு மையத்துக்கு வெளியே உள்ள படிக்கட்டுகள் வழியாக 67வது மாடிக்கு சென்றனர்.

குறித்த இருவரும் திட்டமிட்டு உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


முதல் இணைப்பு

கொழும்பில் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவனும் மாணவியும் மாடியில் இருந்து வீழ்ந்து உயிரை மாய்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொம்பனி வீதியிலுள்ள சொகுசு குடியிருப்பு கட்டிடத்தின் 67வது மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துள்ளதாக தெரிய வருகிறது.

கொழும்பு குருந்துவத்தையில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவனும் மாணவியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

மேலதிக விசாரணை

உயிரிழந்தவர்கள் வெள்ளவத்தை மற்றும் களனி பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரை மாய்த்துக் கொண்டமைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Source: https://tamilwin.com/article/boy-girl-of-around-15-years-reported-dead-colombo-1719942400

NO COMMENTS

Exit mobile version