இலங்கையில் சிறுவர்கள் மீதான உரிமைகள் மீறல் மற்றும் உடல் ரீதியான தண்டனைச்
சம்பவங்கள் அதிகரிப்பது குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஆழ்ந்த கவலை
தெரிவித்துள்ளது.
இத்தகைய தண்டனைகள் உடல் மற்றும் நீண்டகால உள பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், சில
சமயங்களில் தவறான முடிவெடுப்பதற்கு கூட வழிவகுப்பதாகவும் ஆணைக்குழு கூறியுள்ளது.
18 வயதுக்குட்பட்டோர் மீதான அனைத்து விதமான கொடூரமான தண்டனைகளையும் தடை
செய்யும் நோக்குடன், ‘தண்டனைச் சட்டம் (திருத்தம்) சட்டமூலம்’ (Penal Code
(Amendment) Bill) ஜூலை 4 ஆம் திகதியன்று வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதை
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வரவேற்றுள்ளது.
உடல் ரீதியான தண்டனை
உடல் ரீதியான தண்டனையை ஒழிப்பது என்பது, பயம் அல்லது வன்முறைக்கு பதில்,
குழந்தைகளின் கண்ணியம் மற்றும் நம்பிக்கையை வளர்க்கும் மரியாதைக்குரிய
ஒழுக்கத்தை மேம்படுத்துவதற்கான கூட்டுப் பொறுப்பு என இலங்கை மனித உரிமைகள்
ஆணைக்குழுவின் தலைவர் நீதியரசர் எல்.ரி.பி. தெஹிதெனிய வலியுறுத்தியுள்ளார்.
இந்த சீர்திருத்தங்களை அரசியல்மயமாக்காமல் அல்லது தவறாக சித்தரிக்காமல்
ஆரோக்கியமான விவாதங்களில் ஈடுபடுமாறு ஆணைக்குழு பொதுமக்களைக்
கேட்டுக்கொண்டுள்ளது.
சிறுவர்களை பாதுகாப்பது குடும்பங்கள், கல்வியாளர்கள் மற்றும் ஒட்டுமொத்த
சமூகத்தின் சட்ட மற்றும் தார்மீகப் பொறுப்பு எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.