யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின்
சமாசத்தில் ஊழல் நடைபெற்றிருப்பதாக சமூக செயற்பாட்டாளர் முரளிதரன் குற்றம்
சாட்டியுள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தாளையடி நன்னீர் திட்ட நிறுவனத்தால் அனர்த்த உதவிக்கென அன்பளிப்பாக
சமாசத்திற்கு வழங்கப்பட்ட இரு மீன்பிடி படகுகளை சமாசம் குத்தகைக்கு
கொடுத்திருப்பது பிழையான செயல்.
கடலில் அனர்த்தம்
கடலில் அனர்த்தம் ஏற்பட்டால் இந்த படகை அனுப்பி மக்களை காப்பாற்றுவதற்கு
கொடுக்கப்பட்ட படகை பொதுச் சபையினுடைய அனுமதி இன்றி நிர்வாக உறுப்பினர்கள் ஒரு
சிலர் கூடி நிர்வாக உறுப்பினர்களுக்கே குத்தகைக்கு கொடுத்தது மிகவும் பிழையான
விடயம்.
சமாசத்தின் உடைய ஒரு பொருளை குத்தகைக்கு கொடுப்பதாக இருந்தால் அனைத்து
மக்களையும் ஒன்று கூட்டி கலந்துரையாடலை மேற்கொண்டிருக்க வேண்டும்.
பொதுவாக அனைத்து மக்கள் மத்தியில் விலை கூறலை ஏற்படுத்தி இருக்க வேண்டும்.
இருப்பினும், அவ்வாறு எதுவும் இடம்பெறவில்லை
இவர்களுடைய செயல்பாட்டிற்கு கூட்டுறவு ஆணையாளரும் துணை போயிருக்கின்றார்.
தகுதியற்றவர்கள்
சமாசம் 46 லட்சம் லாபத்தில் இயங்குவதாக வடமராட்சி கிழக்கு சமாச பிரதிநிதிகள்
அண்மையில் தெரிவித்திருந்த போதும் அன்பளிப்பாக அனர்த்த உதவிக்கு வழங்கிய படகை
ஏன் குத்தகைக்கு கொடுத்தார்கள் ?
இப்படிப்பட்ட தலைவர்கள்தான் இவ்வாறான அமைப்புகளில் தொடர்ந்தும் இருக்கிறார்கள்,
இவர்கள் தலைவர்களாக இருக்க தகுதியற்றவர்கள் சமாசத்தினுடைய பொதுச் சபை அமைதியாக
இருக்கின்றது.
உடனடியாக பொதுச் சபையை கூட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும், அனர்த்த உதவிக்கு வழங்கப்பட்ட படகை குத்தகைக்கு கொடுத்திருப்பதன் மூலம் இங்கு
பாரிய மோசடி இடம் பெற்றிருக்கின்றது.
இது தொடர்பாக உரியவர்கள் விசாரணை மேற்கொண்டு இந்த ஊழலை வெளிக்கொண்டு
வரவேண்டும்” என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
