யாழில் முறையற்ற கழிவு முகாமைத்துவம் சூழல் தொகுதியின் உயிர் பல்வகமைக்கு
பாரிய ஆபத்தை ஏற்படுத்தும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக விலங்கியல் துறைப்
பேராசிரியர் கணபதி கஜபதி தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், புலம்பெயர் பறவைகளான வலசைப் பறவைகள் அரிதாக
காணப்படுகின்ற சரசாலை குருவிக்காடு , நாகர்கோவில் பகுதி மற்றும் அரியாலைப்
பகுதி முறையற்ற கழிவகற்றல் மற்றும் முறையற்ற கழிவு முகாமைத்துவத்தினால்
ஆபத்தை எதிர்கொள்ளும் பகுதிகளாக காணப்படுகின்றன.
நகரமயமாதல், பொருளாதார வளர்ச்சி, வாழ்க்கை தர அதிகரிப்பு மற்றும் குடித் தொகை
அதிகரிப்பு கழிவகற்றல் செயற்பாட்டிற்கு சவாலாக இருக்கின்ற நிலையில்
அதற்கேற்ற முறையான கழிவகற்றறல் பொறிமுறை இன்னும் உருவாக்கப்படவில்லை.
முறையற்ற கழிவகற்றல்
மாவட்டத்தைப் பொறுத்தவரையில் வீதிகளில் கழிவுகள் வீசப்படுகின்றன, எரியூட்டப்படுகின்றன, இவை அனைத்தும் சட்டத்துக்கு முரணான செயற்பாடாகும்.
முறையற்ற கழிவகற்றலினால் சமூகத்தில் வாழுகின்ற உயிரினங்கள் பாரிய சவால்களை
எதிர் நோக்குகின்றன.
சரசாலை, நாகர்கோயில் மற்றும் அரியாலை பகுதிகள் அடையாளப்படுத்தப்பட்ட
பாதுகாக்கப்பட வேண்டிய பகுதிகளாக காணப்படுகின்ற நிலையிலும் அங்கு உக்க முடியாத
கழிவுகள் தொடர்ந்து கொட்டப்படுகின்றது.
கடற்கரை ஓரமாக மற்றும் அடர்ந்த பற்றைகள் உள்ள பிரதேசங்களில் இவ்வாறு கழிவுகள
கொட்டப்படும் போது அவற்றை விலங்குகள் மற்றும் பறவை இனங்களின் உணவுக்காக தேடிச்
செல்கின்றன.
அவற்றை உண்ணும் போதும் விலங்குகள் மற்றும் பறவை இனங்களின் உணவுத் தொகுதிக்கு
ஆபத்தை விளைவிக்கக் கூடிய கழிவுகள் கொட்டப்படுவதை அவதானிக்க முடிகிறது.
பாரிய அனர்த்தம்
அண்மையில் நெடுந்தீவு பிரதேசத்தில் குதிரைகள் இறந்து கிடந்த போது அவற்றை ஆய்வு
செய்தபோது அவற்றின் வயிற்றுக்குள் பொலுத்தீன் பைகள் இருந்தமை
அவதானிக்கப்பட்டது.
சூழலைப் பற்றிய அறிவு இல்லாமல் கழிவகற்றல் செயற்பாடுகளில் ஈடுபடும் போது
மனிதனுக்கு மட்டுமல்ல சூழலில் வாழுகின்ற உயிரினங்களுக்கும் அது ஆபத்தை
விளைவிக்கக் கூடியதாக இருக்கும்.
ஒரு சூழலில் வாழ்கின்ற மனிதன் மற்றும் உயிரிகளின் இயல்பான வாழ்க்கைக்கு முறையான
கழிவகற்றல் பொறிமுறை செயல்படுத்தப்பட வேண்டும். அல்லாவிட்டால் சூழலில்
வாழ்கின்ற ஒரு அங்கி அல்லது ஒரு அங்கம் பாதிக்கப்படுமானால் அது ஒட்டுமொத்த
சூழலையும் பாதிக்கும்.
ஆகவே யாழ்.மாவட்டத்தில் முறையான கழிவு முகமைத்துவம் பின்பற்றப்படாத நிலையில்
கழிவகற்றல் செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம் பெறுவது எதிர்காலத்தில் பாரிய
அனர்த்தத்துக்கு வழிவகுக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.
