இலங்கையில் டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட 203 நபர்களுக்கு மரணச் சான்றிதழ்கள் வழங்கப்படும் எனப் பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது.
திடீர் அனர்த்தம் ஏற்பட்டு இரண்டு வாரங்களுக்குப் பின்னரும் ஒரு நபர் காணாமல் போயிருந்தால், மேலதிக தகவல் எதுவும் கிடைக்காத பட்சத்தில், அவருக்கு மரணச் சான்றிதழ் வழங்க வசதி செய்யும் சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு டிசம்பர் 2ஆம் திகதி வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் சசிதேவி ஜலதீபன் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசாங்க இழப்பீட்டு செயன்முறையை விரைவுபடுத்த உதவும் என அவர் மேலும் குறிப்பிட்டார்
அனர்த்தத்தில் உயிரிழந்தவர்கள்
காணாமல் போனவர்களுக்கு மரணச் சான்றிதழ்களை வழங்குவதற்கான சட்ட ஏற்பாடுகள் தற்போது நடைமுறையில் உள்ளதாக சுட்டிக்காட்டினார்.
ஒரு குடியிருப்பாளர் அனர்த்தம் காரணமாகக் காணாமல் போனதை கிராம உத்தியோகத்தர் உறுதிப்படுத்தியவுடன், மாவட்ட பிரதிப் பதிவாளர் சான்றிதழை வழங்க அதிகாரம் பெறுவார் என தெரிவிக்கப்படுகின்றது.
ஆட்சேபனைகள் எதுவும் பெறப்படாவிட்டால், பிரதேச செயலாளர் விண்ணப்பத்திற்கு ஒப்புதல் அளிக்கலாம்.
அதன் பின்னர், பிராந்திய பிரதி அல்லது உதவிப் பதிவாளர் நாயகத்தினால் அந்த விண்ணப்பம் செயலாக்கப்படும் என கூறினார்.
அனர்த்தத்தில் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட 611 நபர்களில் 126 பேருக்கு ஏற்கனவே மரணச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பதிவாளர் நாயகம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
