Home ஏனையவை வாழ்க்கைமுறை அதிகரித்து வரும் அபாயநிலை.. 600 கிராம அலுவலர் பிரிவுகள் குறித்து அவசர தீர்மானம்

அதிகரித்து வரும் அபாயநிலை.. 600 கிராம அலுவலர் பிரிவுகள் குறித்து அவசர தீர்மானம்

0

அரச நிறுவனங்கள், பாடசாலைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை உள்ளடக்கி, குறுகிய காலத்தில் டெங்கு நோயை எதிர்த்துப் போராடுவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த சுற்றறிக்கைகளை வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், ஜூன் 24, 25 மற்றும் 26 ஆகிய மூன்று நாட்களில் 600 கிராம அலுவலர் கோட்டங்களை உள்ளடக்கி டெங்கு கட்டுப்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தென்மேற்குப் பருவமழைக் காலத்தால் வேகமாகப் பரவிவரும் டெங்கு அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கான குறுகிய கால மற்றும் நீண்ட காலத் திட்டங்கள் குறித்த கலந்துரையாடல் ஒன்று இன்று பிற்பகல் (22) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

முக்கிய முடிவுகள்.. 

சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதித்த மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமநாயக்க ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் இந்த முடிவுகள் அங்கு எட்டப்பட்டுள்ளன. 

முப்படைகளின் தலைமையில் ஒரு கண்காணிப்புப் பிரிவை நிறுவுவதற்கும், சட்ட நடவடிக்கைகளைக் கடுமையாக்குவதற்கும், மேலும் பிராந்திய அளவில் தற்போது அமைக்கப்பட்டுள்ள சமூக வலிமை மற்றும் பொதுப் பாதுகாப்புக் குழுக்கள் மூலம் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பாடசாலைகள், தொழிற்சாலைகள், அரச நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதால், அந்த இடங்களை உள்ளடக்கும் வகையில் குறுகிய கால நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியம் இந்தக் கலந்துரையாடலின் போது வலியுறுத்தப்பட்டது.

மேலும், அவ்வப்போது ஏற்படும் இதுபோன்ற போக்குகளை மாற்றுவதற்கு எடுக்கப்பட வேண்டிய நீண்டகால நடவடிக்கைகள் குறித்து நீண்ட விவாதம் நடைபெற்றது. 

Source: https://tamilwin.com/article/dengue-spread-prevalence-sri-lanka-increases-1782137799

NO COMMENTS

Exit mobile version