Home இலங்கை சமூகம் மன்னாரில் காற்றாலை குறித்த முக்கிய கலந்துரையாடல்: இடையில் வெளியேறிய அமைச்சர்

மன்னாரில் காற்றாலை குறித்த முக்கிய கலந்துரையாடல்: இடையில் வெளியேறிய அமைச்சர்

0

மன்னார் (Mannar) காற்றாலை தொடர்பில் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடலிருந்து எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி (Kumara Jayakody) இடையில் வெளியேறியுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று (05) இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், மன்னாரில் புதிதாக அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரங்கள்
தொடர்பாக குறித்த பகுதி மக்களுடன் முக்கிய கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காற்றாலை கோபுரங்கள்

இதனடிப்படையில், இன்று (05) காலை பத்து மணி
அளவில் முதலாவது கலந்துரையாடல் மன்னார் சாந்திபுரம் ,சௌத்பார் கிராமங்களை
உள்ளடக்கி சாந்திபுரம் மண்டபத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு, எரிசக்தி அமைச்சர்
பொறியியலாளர் குமார ஜெயக்கொடி தலைமையிலான குழுவினர் இன்று (05) மன்னாரிற்கு வருகை தந்துள்ளனர்.

மன்னார் நகர பிரதேச செயலாளர் பிரிவில் சௌத்பார் பகுதியில் இரண்டு காற்றாலை
கோபுரங்களும், தாழ்வு பாட்டில் இரண்டு காற்றாலை கோபுரங்களும் மற்றும் தோட்டவெளியில் இரண்டு காற்றாலை கோபுரங்களும் அமைக்கப்படவுள்ளது.

குறித்த ஐந்து காற்றாலை கோபுரங்களும் 20 மெகா வாட் கொண்டதாக
அமைக்கப்படவுள்ளது.

எட்டு காற்றாலை

மேலும் ஓலைத்தொடுவாய் பகுதியில் ஆறு காற்றாலை மின்
கோபுரங்களும் மற்றும் பேசாலை மேற்கில் இரண்டு காற்றாலை மின் கோபுரங்களும்
அமைக்கப்படவுள்ளது.

குறித்த எட்டு காற்றாலை மின் கோபுரங்களும் 50 மெகா வாட்
கொண்டதாக அமைக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் மக்களின் கருத்தை கேட்டறிய அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடி தலைமையிலான குழுவினர்
மன்னாரிற்கு விஜயம் செய்துள்ளனர்.

இதன்போது அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் மக்களுடன் கலந்துரையாடிய போதும் மக்கள்
தமது கிராமங்களுக்குள் புதிதாக அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரங்கள் தேவை
இல்லை எனவும் குறித்த காற்றாலை மின் கோபுரங்களை அமைக்க தாம் எதிர்ப்பு
தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

காற்றாலை கோபுரங்கள்

அத்தோடு, மன்னார் தீவில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள 30 காற்றாலை மின்
கோபுரங்களால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து
வருவதாகவும் மற்றும் கடற்றொழிலாளர்கள் தொழிலை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தமது கிராம மக்கள் நிம்மதியாக வாழ வேண்டுமாக
இருந்தால் காற்றாலை கோபுரங்களை மன்னார் தீவில் இருந்து அப்புறப்படுத்த
வேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் முன் வைத்ததோடு, எமது பகுதிக்குள் காற்றாலை அமைக்க
ஒரு போதும் அனுமதி வழங்க மாட்டோம் என உறுதிபட தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், அமைச்சர் தலைமையிலான குழுவினர் மக்களுடன் கலந்துரையாடி தமக்கு சாதகமான
பதிலை எதிர்பார்க்க முயற்சி செய்த போதும் கலந்து கொண்ட அனைத்து மக்களும் தமது
பகுதிக்குள் காற்றாலை வேண்டாம் எனவும் அமைக்க அனுமதி வழங்க மாட்டோம் எனவும் ஒருமித்து தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, அமைச்சர் தலைமையிலான குழுவினர் அங்கிருந்து வெளியேறியதுடன் குறித்த
கலந்துரையாடல் தொடர்பில் ஊடகவியலாளர்கள் அமைச்சரிடம் கருத்து கேட்ட போதும்
எவ்வித பதிலும் வழங்காது அவர் அங்கிருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version