Home இலங்கை சமூகம் கடமையை பொறுப்பேற்பதில் ஏற்பட்ட குழப்ப நிலை! வைத்தியசாலையில் இருந்து வெளியேறிய வைத்தியர் அர்ச்சுனா

கடமையை பொறுப்பேற்பதில் ஏற்பட்ட குழப்ப நிலை! வைத்தியசாலையில் இருந்து வெளியேறிய வைத்தியர் அர்ச்சுனா

0

புதிய இணைப்பு

சாவகச்சேரி வைத்தியசாலைக்கு இன்று காலை சென்ற வைத்தியர் அர்ச்சுனா நீண்ட வாத விவாதங்களின் பின்னர் வைத்தியசாலை வளாகத்தில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு, பதில்
வைத்திய அத்தியட்சகராக முன்னர் கடமையாற்றிய
இராமநாதன் அர்ச்சுனா வருகைதந்தமையால் குழப்பமான
நிலை ஏற்பட்டது.

வைத்தியசாலை அத்தியட்சகர் அலுவலகத்தில் யார் வைத்திய அத்தியட்சகர் என
இராமநாதன் அர்ச்சுனாவும் கோபால மூர்த்தி ரஜீவ்வும் நீண்ட விவாதத்தில்
ஈடுபட்டநிலையில் பொலிஸார் தலையிட்டு சுமுகமான நிலையை ஏற்படுத்த முயன்றனர்.

இதனையடுத்து சில மணிநேரங்கள் வைத்தியசாலை அலுவலக அறையில் சில கடமைகளில்
ஈடுபட்டு விட்டு இராமநாதன் அர்ச்சுனா வெளியேறிச் சென்றார்.

இதேவேளை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக வைத்தியர்
ரஜீவ் தொடர்ந்தும் கடமையில் உள்ளார்.

தனக்கு உத்தியோகபூர்வமாக மத்திய சுகாதார அமைச்சில் இருந்து என்னை
நீக்குவதற்கான கடிதம் வராத நிலையில் நானே சாவகச்சேரி வைத்தியசாலை பதில்
அத்தியட்சகர் என தெரிவித்த இராமநாதன் அர்ச்சுனா, எனது விடுமுறை நேற்று
நிறைவடைந்த நிலையில் இன்று மீண்டும் கடமைக்கு வந்துள்ளேன் என தெரிவித்தார்.

நாளை சுகாதார அமைச்சர் உள்ளிட்ட உயர்மட்டக்குழு யாழ்ப்பாணத்துக்கு வரும்போது
இது தொடர்பில் முடிவு எட்டப்பட்டும் எனவும் இராமநாதன் அர்ச்சுனா நம்பிக்கை
வெளியிட்டார்.

வெளியேறிச் சென்ற வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை குழுமிய பொதுமக்கள் அவரை
தோளில் தாங்கிச் சென்றனர்.

இதேவேளை சாவகச்சேரி வைத்தியசாலைப் பகுதியில் காலை முதல் பொலிஸார்
குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு காணப்பட்டதுடன் வைத்தியசாலை
செயற்பாடுகள் சுமூகமாக நடைபெற்றன.

இதேவேளை
வைத்தியசாலை முன்பாக குழப்பத்தில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் இருவர்
கைது செய்யப்பட்டு இருவரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர். 

மேலதிக தகவல்கள்  – தீபன் மற்றும் கஜிந்தன்

இரண்டாம் இணைப்பு

சாவகச்சேரி வைத்தியசாலையில் பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் அர்ச்சுனா இன்று மீண்டும் சாவகச்சேரி வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார். 

சாவகச்சேரி வைத்தியசாலை முன்பாக அண்மையில் பொதுமக்கள் கூடி பெருமெடுப்பில்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் மீண்டும் இன்று பொதுமக்கள் கூடலாம் என்ற
நிலையில் முன்னெச்சரிக்கையாக பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்தநிலையில், இதனையும் மீறி சாவகச்சேரி பதில் வைத்திய அத்தியட்சகராக இருந்த இராமநாதன்
அர்ச்சுனா வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.

மேலும், குறித்த பகுதியில் பரபரப்பான ஒரு சூழல் காணப்பட்டதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார். 

மேலதிக தகவல்கள் – தீபன் மற்றும் கஜிந்தன்

முதலாம் இணைப்பு 

சாவகச்சேரி வைத்தியசாலை வளாகத்திற்கு  முன்பாக இன்று காலை முதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

சாவகச்சேரி வைத்தியசாலையில் பதில் வைத்திய அத்தியட்சகராக நியமிக்கப்பட்டிருந்த வைத்தியர் அர்ச்சுனா கடந்த திங்கட்கிழமை விசாரணைகளுக்காக கொழும்புக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், அவரது விடுமுறை காலம் முடிந்து இன்று மீண்டும் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு செல்லவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. 

மேலும், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை முன்பாக நபரொருவரும் பொலிஸாரால் இன்று கைது
செய்யப்பட்டார். 

இந்த நிலையில், பொதுமக்கள் ஒன்றுகூடுவதை தவிர்ப்பதற்காக பொலிஸாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

குறித்த பகுதிக்குள் காரணம் ஏதுமின்றி எவர் ஒருவரையும் பொலிஸார் அனுமதிக்கவில்லை என்றும்,  தங்களது கட்டுப்பாட்டில் சாவகச்சேரி வைத்தியசாலையை பொலிஸார் வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

மேலதிக தகவல் – கஜிந்தன், தீபன்

NO COMMENTS

Exit mobile version