Home இலங்கை சமூகம் மலிவு விலை மருந்துகளால் மனித உயிருக்கு ஆபத்து! மருத்துவர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை

மலிவு விலை மருந்துகளால் மனித உயிருக்கு ஆபத்து! மருத்துவர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை

0

இலங்கையில் ஒருசில தனியார் மருந்தகங்களில் விற்பனை செய்யப்படும் குறிப்பிட்ட சில மலிவு விலை மருந்துகள் காரணமாக மனித உயிர்களுக்கு ஆபத்து இருப்பதாக மருத்துவர் சமல் சஞ்சீவ எச்சரித்துள்ளார்.

மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டணியின் தலைவரான விசேட மருத்து நிபுணரான சமல் சஞ்சீவ, கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

இரசாயனப் பொருட்கள் இல்லை

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

தனியார் மருந்தகங்களில் விற்பனை செய்யப்படும் சில மருந்துகளில் குறிப்பிட்ட இரசாயனப் பொருட்கள் இல்லை என்பதும், அவற்றின் லேபிள்களில் குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்கள் கூட அந்த நாடுகளில் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.

முக்கிய மருத்துவமனைகளுக்கு அருகிலுள்ள மருந்தகங்களில் இந்த மருந்துகள் மிகக் குறைந்த அல்லது மிக அதிக விலைக்கு விற்கப்படுகிறது.

இது தொடர்பாக முறையான ஒழுங்குமுறை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பல சந்தர்ப்பங்களில் சுகாதார அமைச்சகத்திற்கு சுட்டிக்காட்டிய போதிலும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அவதானிப்பு

உதாரணமாக, பாப்பாவெரின் என்ற மருந்தை அரசாங்கம் வாங்கும் போது அதன் விலை 50 ஆயிரத்துக்கும் அதிகமாகும், ஆனால் அதே மருந்து வெளிச் சந்தையில் 300 ரூபாவிற்கும் குறைவாகக் கிடைக்கிறது என்று முன்னர் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அதுபற்றிய அவதானிப்புகளின் போது குறித்த மருந்துகள் எந்த வேதியியல் தரநிலைகளையும் பூர்த்தி செய்யவில்லை என்பதும், மருந்துகளை உற்பத்தி செய்வதாகக் கூறும் நிறுவனங்கள் தற்போது இந்தியாவில் இயங்கவில்லை என்பதும் தெரியவந்தது.

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் மக்களுக்கு மலிவான மருந்துகள் சந்தையில் கிடைக்கின்றன என்ற தவறான கருத்து பரப்பப்பட்டு வருவதாகவும், அத்தகைய மருந்துகள் அவசர சோதனைகள் மற்றும் அறிவியல் சோதனைகளுக்கு உட்படுத்தப்படாவிட்டால், அவற்றைப் பயன்படுத்தும் நோயாளிகளுக்கு கடுமையான ஆபத்துக்கள் மற்றும் பின்விளைவுகள் ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் விசேட மருத்துவ நிபுணர் சமல் சஞ்சீவ மேலும் வலியுறுத்தியுள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version