வலிகாமம் கல்வி வலயத்திற்கு உட்பட்ட உடுவில் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 5
பாடசாலைகளில் போதைப்பொருள் பாவனை இருப்பதாக உடுவில் பிரதேச செயலக அபிவிருத்தி
குழு கூட்டத்தில் துறை சார் அதிகாரிகளினால் அதிர்ச்சித் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
உடுவில் பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டம் நேற்று (16) அப்பிரதேச
அபிவிருத்திக் குழு தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் பவானந்தராஜா
தலைமையில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் போதைப்பொருள் பாவனை தொடர்பில்
ஆராயப்பட்டபோது துறைசார் அதிகாரி ஒருவரினால் குறித்த அதிர்ச்சித் தகவல்
வெளியிடப்பட்டது.
போதைப் பொருளுடன் தொடர்பு
குறித்த அதிகாரி இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், ”உடுவில் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பகுதியில் 32 பாடசாலைகள் உள்ளன.
அவற்றில் 5 பாடசாலைகளில் போதைப் பொருளை பயன்படுத்துகின்ற மாணவர்கள் அடையாளம்
காணப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களின் குடும்ப விபரங்கள் தொடர்பில் விசாரணைகளை
மேற்கொண்டபோது, அந்த மாணவர்களின் குடும்பங்களில் உள்ள பெண்களும் போதைப்
பொருளுடன் தொடர்புடையவர்களாக உள்ளமை தெரியவந்துள்ளது.
உடுவில் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட முப்பது கிராம சேவையாளர் பிரிவுகளில் 5
கிராம சேவையாளர் பிரிவு போதைப்பொருள் தொடர்பான அடையாளப்படுத்தப்பட்ட
பிரிவுகளாக இனங்காணப்பட்டுள்ளது.
மேலும் இவ்வருடம் தை மாதம் தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் சிறுவர்
தொடர்பான முறைப்பாடுகளாக குறிப்பாக, பாடசாலை இடைவிலகல், பாலியல்
துன்புறுத்தல், பாலியல் தொடர்பு, குடும்ப வன்முறை உள்பட 67 முறைப்பாடுகள்
பதிவு செய்யப்பட்டுள்ளன.
பவானந்தராஜா தெரிவிப்பு
அந்த முறைப்பாடுகள் மீதான நடவடிக்கைகளும்
எடுக்கப்பட்டுள்ளன.
ஆகவே குறித்த பிரதேச பகுதிகளில் வழி தவறி செல்லுகின்ற பாடசாலை மாணவர்களை
சரியான வழியை காட்டுவதற்கும், ஏனைய மாணவர்களை விழிப்படையச் செய்வதற்கும்
அனைத்து தரப்பினர்களையும் உள்ளடக்கிய ஒழுங்குபடுத்தப்பட்ட கட்டமைப்பு
உருவாக்கப் பட வேண்டும்“ என தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் பவானந்தராஜா (Shri Bhavananda Raja), “குறித்த
அதிகாரிகள் முன்வைத்த தகவல்களை பார்க்கும்போது தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட
வேண்டியதன் முக்கியத்துவம் வெளிப்படுத்தப்படுகிறது.
காவல்துறையினர் பிரதேச செயலக அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதுடன் போதைப்பொருள்
பாவனையை தடுப்பதற்கான ச ட்ட ரீதியான நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொள்ள
வேண்டும்.
யாழ்ப்பாணத்தில் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு வழங்கும்
நிலையம் ஒன்றை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது. விரைவில்
அதை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கின்றோம்” என தெரிவித்தார்.
