யாழ்ப்பாணம் – நெடுந்தீவிற்கு செல்வதற்கான படகுகள் சீரின்மையால் நெடுந்தீவிற்கு போக்குவரத்து செய்யவிருந்த பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இன்று (15) காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில் பயணிகள் பல மணி நேரமாக படகிற்காக காத்திருக்கின்றனர்.
இது குறித்து மேலும் தெரியவருகையில், வெள்ளநிவாரணம் வழங்குவதற்காக நெடுந்தீவிற்கு செல்ல முற்பட்டவேளை போக்குவரத்திற்கான
படகுகள் சீரின்மையால் பயணிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டம்
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும்
வேலைத்திட்டம் இன்று நெடுந்தீவில் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இதற்கு செல்வதற்காக அரச உத்தியோகத்தர்கள் ஒரு தொகுதியினர், நாடாளுமன்ற
உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உள்ளிட்ட பொதுமக்கள் பலரும் தயாராகியிருந்தனர்.
இதன்போது அனைவரையும் ஏற்றிச் செல்வதற்காக கடற்படையின் கட்டுப்பாட்டிலுள்ள
நெடுந்தாரகை படகு வருகைதந்தது.
படகில் ஏறுவதற்காக நீண்ட வரிசைகளில் அரச உத்தியோகத்தர்கள், வங்கி
முகாமையாளர்கள், வைத்தியர்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் நிவாரணபணிகளை
முன்னெடுப்பவர்கள் என பலரும் காத்திருந்தனர். ஆனால் கடற்படையினர் 100 பேரை மாத்திரமே படகில் ஏற்ற முடியும் என கூறினர்.
அத்துடன் நெடுந்தீவுக்கான குமுதினிப் படகும் பழுதடைந்துள்ளதாக நெடுந்தீவு
பிரதேச செயலர் குறிப்பிட்டார். இதனால் தினசரி வேலைக்குச் செல்லும் பல அரச
உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் படகில் செல்லமுடியாது புறக்கணிக்கப்பட்டனர்.
படகிற்காக காத்திருக்கின்றனர்
மக்கள் புறக்கணிக்கப்பட்டமையைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினரும் தனது
பயணத்தை இரத்து செய்து யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் ஏனைய
அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் இது
தொடர்பில் தொலைபேசி ஊடாக அறிவிக்கப்பட்ட நிலையில் எவ்வித ஆக்கபூர்வமான பதிலும்
கிடைக்கவில்லை.
இறுதியில் நெடுந்தீவு பிரதேச செயலரின் முயற்சியில் இறந்தவரின் உடலைக்கொண்டு
செல்லும் தனியார் படகு ஒன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பொதுமக்கள்,
அரச உத்தியோகத்தர்களைக் கொண்டு செல்ல முயற்சித்தனர்.
இந்தநிலையில் இறந்த உடலுடன்
செல்வதற்கு மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தமையால் குறித்த பயணமும் இரத்தானது.
இறுதியில் நெடுந்தீவிலிருந்து குறிகட்டுவான் படகிற்காக அனைவரும்
காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
